மகாராஷ்டிராவில் ஒரு டோல்கேட் கூட இருக்காது.. தீ வைத்து கொளுத்திடுவோம்...ராஜ்தாக்கரே பகிரங்க வார்னிங்
மும்பை: மகாராஷ்டிராவில் அநியாய கட்டண வசூலில் ஈடுபடும் டோல்கேட்டுகள் இந்த கொள்ளையை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு டோல்கேட் கூட இருக்காது; அத்தனை டோல்கேட்டுகளையும் தீ வைத்து கொளுத்துவோம் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பல மாநிலங்களில் சுங்க சாவடிகள் எனப்படும் டோல்கேட்டுகள் பகல் கொள்ளையில் ஈடுபடுகின்றன. தமிழ்நாட்டிலும் சுங்க சாவடிகளுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் டோல்கேட்டுகளை பலமுறை சூறையாடியிருக்கின்றனர். இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ.வை, டோல்கேட் முருகன் என சமூக வலைதளங்களில் அழைக்கப்படுவதையும் பார்க்க முடியும்.

இதேபோன்ற சூழ்நிலை மகாராஷ்டிராவில் உருவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சுங்கசாவடிகள் ஒன்று கூட இருக்கக் கூடாது என்பது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் வலியுறுத்தல். ஒவ்வொரு தேர்தலின் போதும் மகாராஷ்டிரா கட்சிகள் இது தொடர்பாக வாக்குறுதிகள் அளித்தும் இருந்தன. ஆனால் இவை நிறைவேற்றப்படவில்லை என்பது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் குற்றச்சாட்டு.
இதனிடையே மகாராஷ்டிராவில் பல சுங்க சாவடிகளை நவநிர்மாண் சேனாவினர் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், எந்த ஒரு அரசியல் கட்சியும் சுங்க சாவடிகளை மூடுவதில் அக்கறை காட்டுவதே இல்லை. உள்ளூர் வாகனங்களுக்கு அநியாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை முறையிட்டுப் பார்த்தும் தடுத்துப் பார்த்தும் இன்னமும் தொடருகிறது. இது தொடர்பாக அரசுக்கு கெடு விதித்துள்ளோம். எங்களது கெடுவையும் கோரிக்கையையும் ஏற்று நடக்க வேண்டும். இல்லை எனில் மகாராஷ்டிராவின் சுங்க சாவடிகள் தீ வைத்து கொளுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications