"கிரிப்டோகரன்சிகளை முற்றிலுமாக தடை செய்வது தான் சரி.." பரபரப்பை கிளப்பிய ரிசர்வ் வங்கி துணை கவர்னர்
மும்பை: கிரிப்டோகரன்சி மீது மத்திய அரசு 30% வரி விதித்துள்ள நிலையில், கிரிப்டோகரன்சி தொடர்பாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி ரபி சங்கர் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பிப்.1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி
இந்தியாவில் கிரிப்டோகரன்சி என்பது பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. இளைஞர்கள் பலரும் இதில் முதலீடு செய்துள்ள நிலையில், இதைக் கண்காணிக்க யாரும் இல்லை என்பதால் இது பாதுகாப்பான முதலீடு தானா என்பதில் தொடர்ந்து கேள்வி நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே கிரிப்டோகரன்சியை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாகவும் இது தொடர்பான மசோதாவை அரசு விரைவில் கொண்டு வரும் எனத் தகவல் வெளியானது.

வரி
இந்தச் சூழலில் தான் பட்ஜெட் உரையின் போது. கிரிப்டோகரன்சி முதலீடுகளில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். நாட்டில் தற்போது உள்ள வரி விகிதங்களில் இது தான் அதிகம் ஆகும். இதற்கிடையே மத்திய அரசு கிரிப்டோகரன்சிகள் மீது வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளதால், இதை அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துவிட்டது என்றே அர்த்தம் எனச் சிலர் கூற தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி ரபி சங்கர் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை ஏமாற்றும் திட்டம்
இது குறித்து அவர் கூறுகையில், "கிரிப்டோகரன்ஸிகள் மக்களை ஏமாற்றும் (Ponzi schemes) திட்டங்களைப் போன்றது. இதைவிட மோசமானது என்று கூட சொல்லலாம். இவற்றை முற்றிலுமாக தடை செய்வது தான் இந்தியாவிற்கு மிகவும் சிறப்பான முடிவாக இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிகளை ஒரு நாணயம் அல்லது சொத்து அல்லது பண்டம் என எந்த விதத்திலும் வரையறை செய்ய முடியாது. வழக்கமான பணத்தைப் போல அவற்றுக்குப் பணப்புழக்கங்கள் இல்லை. அவற்றுக்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லை.

முழு தடை
எனவே இதை மக்களை ஏமாற்றும் போன்சி திட்டங்கள் என்றோ அல்லது அதைப் போன்ற ஒரு மோசமான திட்டம் என்றும் கூறலாம். இதனால், அனைத்தும் கிரிப்டோகரன்சிகளையும் முற்றிலுமாக தடை செய்வது தான் இந்தியாவுக்குச் சிறந்த ஒரு முடிவாக இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். மத்திய அரசு கிரிப்டோகரன்சிகளை அங்கீகரித்துவிட்டதாகச் சிலர் கூறி வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி ரபி சங்கரின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளுக்கு ஆதரவான முடிவுகளை எடுக்கவில்லை.

நிர்மலா சீதாராமன்
முன்னதாக வரி விதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கிரிப்டோகரன்சிகளை தடை செய்யலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விரிவான ஆலோசனைக்குப் பின்னரே முடிவு எடுக்கப்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது. மேலும் தடை செய்வது தொடர்பான முடிவு ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்படும். இந்த நேரத்தில் நான் கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமானதாகவும் அறிவிக்கவில்லை. அதைத் தடையும் செய்யவில்லை. பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே நாங்கள் வரி விதித்துள்ளோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications