ராகுலுக்கு எதிராக சிடி ஆதாரம் மாயம்.. ‛சாவர்க்கர்’ சர்ச்சை தொடர்பான அவதூறு வழக்கில் ட்விஸ்ட்
மும்பை: லண்டனில் சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசியதாக அவரது பேரன் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு எதிராக புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு ஆதாரமாக வழங்கப்பட்ட சிடியை நீதிமன்றம் நேற்று ஒளிபரப்ப முயன்றது. அப்போது அந்த சிடி காலியாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் தற்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். ராகுல் காந்தி மீத பல்வேறு மாநிலங்களில் அவதூறு வழக்குகள் உள்ளன.

குறிப்பாக சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் உள்ளன. அதில் ஒன்று தான் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எம்பி - எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது.
இந்த வழக்கை சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர் தொடர்ந்தார். லண்டனில் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது சாவர்க்கர் குறித்து அவதூறு பரப்பியதாக பேரன் சத்யகி சாவர்க்கர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் அமோல் ஷிண்டே முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி நீதிமன்றத்தில் சிடி வழங்கப்பட்டு இருந்தது. வழக்கு விசரணையின் ஒரு பகுதியாக இந்த சிடி ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த சிடி மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது சிடி காலியாக இருந்தது. இந்த சிடி தான் வழக்கின் முக்கிய ஆதாரமாக வழங்கப்பட்டு இருந்தது. இந்த சிடியை விசாரணை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட ஆவணத்தில் வழங்கியிருந்தனர். ஆனால் அது காலியாக இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இது நீதிமன்ற விசாரணையை திசைதிருப்பும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சாவர்க்கர் பேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்ராம் கோல்ஹட்கர் கூறுகையில்,‛‛இந்த சிடி ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அதில் எந்த விஷயமும் இல்லை. இதனால்யூடியூப் வீடியோவை பார்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். அதற்கு ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் மிலிண்ட் தத்தாத்ரே பவார் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற மாஜிஸ்திரேட்‛‛இந்திய சாட்சிய சட்டம் 65-பி-யின்படி யூஆர்எல் சார்ந்த விஷயங்கள் சாட்சியமாக்க முடியாது. இதனால் அதனை ஏற்க முடியாது'' என்று கூறினார்.
இதையடுத்து சிடியில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டது பற்றி நீதி விசாரணையை சாவர்க்கர் பேரன் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்தார். அதனை கேட்ட மாஜிஸ்திரேட் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications