காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.. “இனி பிரச்சாரம் செய்ய மாட்டேன்”.. போர்க்கொடி தூக்கிய முஸ்லிம் தலைவர்!
மும்பை: மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாத காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாதி முடிவால் அதிருப்தி அடைந்து, காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது ஆரிப் (நசீம்) கான்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி 102 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி 88 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், பொதுமக்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இன்னும் 3 கட்டங்களாக மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 35 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி) 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை. இதையடுத்து மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பல முஸ்லிம் அமைப்புகள், தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாததால், காங்கிரஸ் கட்சிக்கு இனி பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகருமான முகமது ஆரிப் (நசீம்) கான்.
"வேட்பாளரான என்னையே பூத்துக்குள் விடல.. பாஜக குண்டர்கள் அராஜகம்".. பூபேஷ் பாகேல் பரபர புகார்!
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு முகமது ஆரிப் கான் எழுதியுள்ள கடிதத்தில், “மகாராஷ்டிராவில் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாம் கட்ட தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக நான் பிரசாரம் செய்யப்போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
1) மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் மகா விகாஸ் அகாதி ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை.
2) மகாராஷ்டிரா முழுவதிலும் உள்ள பல முஸ்லிம் அமைப்புகள், தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் காங்கிரஸ் குறைந்தபட்சம் 1 வேட்பாளரையாவது பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட பரிந்துரைக்கவில்லை.
“காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கேட்கிறது. ஆனால், இஸ்லாமிய வேட்பாளர்கள் எங்கே?” என்று மக்கள் கேட்கிறார்கள். கட்சியின் நியாயமற்ற முடிவால் வருத்தம் அடைகிறேன். இதுபோன்ற பிரச்சனைகளை எப்போதும் எழுப்பும் மகாராஷ்டிராவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகளுக்கு என்னிடம் சொல்வதற்கு பதில் இல்லை.
தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்ட, நான்காவது கட்ட, ஐந்தாவது கட்ட தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை. மேலும், மகாராஷ்டிர மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் குழுவில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications