பொருளாதார மந்தநிலை.. மன்மோகன்சிங் எச்சரிக்கையை கேட்டு நடங்க... மத்திய அரசுக்கு சிவசேனா அட்வைஸ்
Recommended Video
மும்பை: நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவிக்கும் கருத்துகளை உன்னிப்பாக கவனித்து நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார நிலை தொடர்பான தகவல்கள் பெரும் கவலைக்குரியதாக உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கைகளால்தான் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலைக்கு போய்விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு.

பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் நிதி அமைச்சராக இருந்த மறைந்த அருண்ஜேட்லி, தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை பொருளாதார மந்த நிலை தொடர்பாக விமர்சித்து வருகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் பொருளாதார தேக்க நிலை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் மன்மோகன்சிங் கருத்துகளை மத்திய அரசு நிராகரித்தது. அத்துடன் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது; இப்போது இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது எனவும் பதில் தரப்பட்டது.
இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் கருத்துகளை உள்வாங்கி நடவடிக்கைகளை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ளதாவது:
பொருளாதார தேக்க நிலை விவகாரத்தில் எந்த ஒரு அரசியல் பார்வையும் இருக்கக் கூடாது. ஜம்மு காஷ்மீர் விவகாரமும் பொருளாதார தேக்க நிலையும் இருவேறுபட்ட விவகாரங்கள். பொருளாதார தேக்க நிலையில் அரசியல் பார்க்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனையை கேட்டு நிலைமையை சரி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications