பறவை காய்ச்சலுக்கும் பாகிஸ்தான்தான் காரணமுன்னு சொல்லுங்க... பாஜகவை கலாய்க்கும் சிவசேனா!
மும்பை: பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள், பறவைகளின் இறப்புகளுக்கு பின்னால் பாகிஸ்தான், நக்சலைட்டுகள் பின்புலம் உள்ளதா? என பாஜக இன்னும் அறிவிக்கவில்லை என பாஜகவை சிவசேனா கிண்டலடித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் காரணமாக மக்கள் சில நாட்கள் கோழிகளையும்,முட்டையையும் சாப்பிட மாட்டார்கள், இது கிராமப்பகுதிகளின் வணிகத்தை பாதிக்கும் என்றும் சிவசேனா கூறியுள்ளது.
இந்தியாவில் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
பறவைக் காய்ச்சல் தீவிரம்
இந்தியாவில் கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன. பறவைக் காய்ச்சல் காரணமாக இந்த மாநிலங்களில் லட்சக்கணக்கான கோழிகள், வாத்துக்கள், காகங்கள் உள்பட பறவைகள் இறந்துள்ளன. பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
விவசயிகள் போராட்டம்
இந்த நிலையில் பறவை பறவைக் காய்ச்சல் தொடர்பாக சிவசேனா கட்சி பாஜகவை கிண்டலடித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியுள்ளதாவது:- வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த நிலையில் பறவைக் காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது. விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானியர்கள், கலிஸ்தானியர்கள், சீனர்கள், நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் உள்ளனர் என்று மத்திய அரசு, அரசு அதிகாரிகள் கூறினர்.
சிவசேனா கிண்டல்
பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள் மற்றும் பறவைகளின் இறப்புகளுக்கு பின்னால் காலிஸ்தானியர்கள் பாகிஸ்தான் மற்றும் நக்சலைட்டுகள் பின்புலம் உள்ளதா? என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் இன்னும் அறிவிக்கவில்லை. கோழிகள் மற்றும் முட்டைகளின் விற்பனை கிராமப்புறங்களில் அதிகம். அவற்றுக்கு சொந்தமாக பொருளாதாரம் உள்ளது, வேளாண் சட்டங்களில் ஏழை முட்டை விற்பனையாளரின் பொருளாதாரத்திற்கு இடமில்லை.
யார் ஆதரவளிப்பார்கள்?
புதிய வேளாண் சட்டத்தின்படி, கார்ப்பரேட்டுகள் கோழிகளை, முட்டைகளை சமாளிக்காது. கோழி பண்ணை மற்றும் அதனை சார்ந்த பணிகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு யார் ஆதரவளிப்பார்கள்? பறவைக் காய்ச்சல் பயம் காரணமாக, மக்கள் சில நாட்கள் கோழிகளையும்,முட்டையையும் சாப்பிட மாட்டார்கள், இது கிராமப்பகுதிகளின் வணிகத்தை பாதிக்கும், இது பொருளாதார நிர்வாகத்தை ஒழித்து விடும் என்று சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.