3வது முறையாக சொல்லி அடித்த கேப்டன் தமிழ்ச்செல்வன்! தமிழர்கள் மோதிய சயான் கோலிவாடா தொகுதியில் வெற்றி!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. சயான் கோலிவாடா சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் வேட்பாளராக தமிழர் கணேஷ்குமார் என இரு தமிழர்கள் நேருக்கு நேர் போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளர் கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களை அதிகமாக கொண்ட தொகுதி சயோன் கோலிவாடா. இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,56,232 பேர், பெண் வாக்காளர்கள் 1,26,961 பேர், 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,83,271 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் 54,845 வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட கணேஷ்குமார் 40,894 வாக்குகளையும் பெற்றனர். கேப்டன் தமிழ்ச்செல்வன் 2வது முறையாக எம்.எல்.ஏ ஆனார்.

சயான் கோலிவாடா தொகுதியில் 2 முறை வென்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய கேப்டன் தமிழ்ச்செல்வன், தற்போது 3-வது முறையாக பாஜக சார்பில் களம் கண்டுள்ளார். கேப்டன் தமிழ்ச்செல்வனை எதிர்த்து மீண்டும் தமிழரான கணேஷ்குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். சயான் கோலிவாடா தொகுதியின் பாஜக வேட்பாளர் கேப்டன் தமிழ்ச்செல்வன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் குமாரின் பூர்வீகம், நெல்லை மாவட்டம் வள்ளியூர். சயோன் கோலிவாடா தொகுதியில் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனாவின் சஞ்சய் பிரபாகர் போகலே உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மகாராஷ்டிரா வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் இந்த தொகுதியில் 3வது முறையாக கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி வாகை சூடுவாரா? அல்லது காங்கிரஸ் வேட்பாளரான தமிழர் கணேஷ்குமார் வெல்வாரா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
"கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு, 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவிட்டேன். ஆனால் இந்த முறை லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டது. எனவே இந்த முறை எனக்கு வெற்றி நிச்சயம்" எனக் கூறி இருந்தார் கணேஷ் குமார். அதேசமயம், கேப்டன் தமிழ்ச்செல்வனோ, "இந்த முறை 40 ஆயிரம் - 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்" எனக் கூறி வந்தார்.
யாருக்கு வெற்றி?: இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர் கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவில் கேப்டன் தமிழ்ச்செல்வன், 7,895 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கேப்டன் தமிழ்ச்செல்வன், 73,429 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் குமார் யாதவ் 65,534 வாக்குகளும் பெற்றுள்ளனர். கேப்டன் தமிழ்ச்செல்வன், 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இதன் மூலம், தமிழ்ச்செல்வன் 3வது முறையாக சயான் கோலிவாடா தொகுதியின் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அவர் அமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications