பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலையா? தற்கொலையா?.. பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலையே என பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மேலும் அவர் தூக்கில் தொங்கியதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தோனி குறித்த வாழ்க்கை வரலாற்றில் நடித்த சுஷாந்த் சிங், நேற்று மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான சுஷாந்த் அவரது குடும்பத்தில் கடைசி பிள்ளையாவார். இவருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். தாய் உயிருடன் இல்லை, தந்தை மட்டும் இருக்கிறார்.
சுஷாந்த் பீகாரில் தனது குடும்பத்தினரை விட்டுவிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாந்த்ராவுக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பீகாரை சேர்ந்த சமையல்காரர்கள் நீரஜ் மற்றும் கேசவ் ஆகியோர் உள்பட 4 பேர் சுஷாந்துடன் தங்கியிருந்தனர். இவர்கள் 4 பேரும் சுஷாந்துடன் 3 ஆண்டுகளாக தங்கியிருந்தனர்.

சகோதரிகள்
கடந்த ஒரு மாதமாக தனது தந்தை, சகோதரிகள், நெருங்கிய நண்பர் ரியா சக்கரவர்த்தி ஆகியோருடன் பேசுவதை சுஷாந்த் நிறுத்திக் கொண்டார். மனஅழுத்தம் காரணமாக நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை மும்பையில் உள்ள கூபர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இறுதி சடங்குகள்
அவரது தந்தை, சகோதரி உள்ளிட்டோர் பீகாரிலிருந்து மும்பை வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்தவுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். இந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. நேற்று இரவு மருத்துவர் குழுவினர் நடத்திய பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டன.

மருத்துவமனை
அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துவிட்டார். மேலும் அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற அடையாளங்கள் உள்ளன. அவர் மரணம் தற்கொலையால் நடந்ததே. அவர் தூக்கில் தொங்கியதாலேயே இறந்தார் என அறிக்கை கூறுகிறது. இது ஆரம்ப கட்ட அறிக்கை மட்டுமே, விரிவான முழு பிரேத பரிசோதனை அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரேத பரிசோதனை அறிக்கை
சுஷாந்தின் தாய்மாமா இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சுஷாந்தின் மைத்துனர் ஓ.பி சிங் ஹரியானா மாநில முதல்வர் அலுவலகத்தின் சிறப்பு போலீஸ் அதிகாரியாவார். அவரும் சுஷாந்த் இறப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையோ தற்கொலை என கூறுகிறது. எனினும் முழு பிரேத பரிசோதனை அறிக்கை, விசாரணை அறிக்கை வெளிவந்தால் மட்டுமே அவரது இறப்பு தற்கொலையா அல்லது கொலையா என்பது தெரியவரும்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம்- 044- 2464 0050
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்- 104- ஐ அழைக்கலாம்.












Click it and Unblock the Notifications