நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல.. கொலை.. பிரேத பரிசோதனை செய்த நபர் பகீர் தகவல்
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்றும் அதிர்ச்சியான தகவலை பிரேத பரிசோதனை செய்த நபர் தெரிவித்துள்ளார். நடிகர் இறந்து 2 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள இந்த பகீர் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் பாலிவுட்டையே உலுக்கியது. Justice for SSR எனும் ஹேஷ்டேக் அப்போது டிரென்டானது.
சுஷாந்த் மரணத்தை மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அது அமலாக்கத் துறை மற்றும் நார்கோடிக்ஸ் தடுப்பு பிரிவு, சிபிஐ ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது. சுஷாந்தின் தோழியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி , நடிகருக்கு போதை பொருளை சப்ளை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

தற்கொலை
இந்த நிலையில் அவரது இறப்பு தற்கொலை இல்லை, கொலை என ஒரு தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் தூக்கு கயிற்றிலிருந்து மீட்கப்பட்டு மும்பையில் உள்ள கூபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

உடல் பிரேத பரிசோதனை
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த அந்த ரூப்குமார் என்பவர் 2 ஆண்டுகள் கழித்து சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது சுஷாந்த் சிங் இறந்த போது 5 உடல்கள் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன.

விஐபியின் சடலம்
அதில் ஒரு சடலம் விஐபியின் சடலம் என தெரிவித்தனர். நான் பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்ற போதுதான் அந்த விஐபி உடல் சுஷாந்த் சிங்கினுடையது என தெரியவந்தது. அவரது உடலில் பல அடையாளங்கள், கழுத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன. உடற்கூராய்வு அனைத்தும் வீடியோ பதிவுதான் செய்யப்பட வேண்டும்.

உயரதிகாரிகள்
ஆனால் எனது உயரதிகாரிகள் புகைப்படங்களை மட்டுமே எடுக்க சொன்னார்கள். அதனால் நானும் அப்படியே செய்தேன். சுஷாந்தின் உடலை பார்த்ததுமே இது தற்கொலை அல்ல, கொலை என நான் எனது சீனியர்களிடம் கூறினேன். அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போட்டோ எடுக்கும் வேலையை மட்டும் பார் என கூறினர். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்து உடலை போலீஸில் ஒப்படைத்தோம். பிரேத பரிசோதனை இரவு நேரத்தில் செய்தோம் என்றார்.

மெல்ல கொல்லும் விஷம்
சுஷாந்த் சிங்கிற்கு மெல்ல கொல்லும் விஷத்தை ரியா சக்கரவர்த்தி கொடுத்திருப்பதாக அவருடைய தந்தை குற்றம்சாட்டியிருந்தார். பாலிவுட்டில் போதை மருந்து கலாச்சாரம் அதிகரித்திருப்பதாகவும், பெரிய நடிகர்களின் பார்ட்டிகளில் போதை பொருள் சகட்டுமேனிக்கு புழங்குவதாகவும் பலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிலையில் சுஷாந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த நபர் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையிலும் எதிரொலித்தது. இது குறித்து கடந்த 23 ஆம் தேதி பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications