இரவில் மும்பையை நெருங்கிய பாகிஸ்தான் படகு! உள்ளே இருந்தது யார்? சுற்றி வளைத்து லாக் செய்த அதிகாரிகள்
மும்பை: மகாராஷ்டிரக் கடலோரப் பகுதியில் திடீரென அடையாளம் தெரியாத படகு ஒன்று தென்பட்டுள்ளது. அது பாகிஸ்தான் நாட்டின் படகாக இருக்கலாம் என்று சந்தேதிக்கப்படுக்கிறது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடலோரப் பகுதிகள் முழுக்கவே பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டோம். பாகிஸ்தானில் இருந்து படகு வழியாக மும்பையில் ஊடுருவிய தீவிரவாதிகள், அங்குப் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் 160+ மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்திய வரலாற்றில் மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

மர்மப் படகு
ஒரு நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடந்ததால் போர்ச் சூழல் காணப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தே மும்பையில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே மீண்டும் அதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் நடக்கவில்லை.
இதற்கிடையே மும்பை கடலோரப் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத படகைப் பார்த்துள்ளனர். மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரெவ்தண்டா கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று தென்பட்டுள்ளது.. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கடலோரப் பகுதியில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்தனர். ரெவ்தண்டாவில் உள்ள கோர்லாய் கடற்கரையிலிருந்து இரண்டு கடல் மைல் தூரத்தில் அந்த மர்மப் படகு தென்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் முதலில் அந்தப் படகைப் பார்த்தாக அதிகாரி கூறியுள்ளார்.
பாகிஸ்தான்
அந்தப் படகில் பாகிஸ்தானியர்கள் இருந்திருக்கலாம் என்றும், சிலர் கப்பலில் இருந்து குதித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கப்பலில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், அது அப்படியே கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரம் இதில் இருந்தவர்கள் யார் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர்களாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டாலும் அதில் உறுதியான தகவல்கள் இல்லை. இதனால் இதன் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார். இருப்பினும், படகைப் பார்த்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டறிதல் பிரிவினர், விரைவு அதிரடிப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
என்ன நடந்தது
பலத்த மழை மற்றும் காற்று இருந்ததால் அதிகாரிகளால் படகை அடைய முடியவில்லை. அதிகாரிகள் வேறு ஒரு சிறிய ஒரு படகைப் பயன்படுத்தி அந்த மர்மப் படகை நெருங்க முயன்றார். ஆனால் வானிலை அதற்கு ஒத்துவரவில்லை. இதனால் வேறு வழியின்றிக் கடற்கரைக்குத் திரும்ப வேண்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டை
மறுபுறம் கடலோர இரவில் தேடுதல் வேட்டை தொடங்கியது. இரவில் பல இடங்களில் தீவிரச் சோதனை நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூத்த அதிகாரிகள் நிலைமை கண்காணித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோரப் பகுதி முழுக்க பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications