முகேஷ் அம்பானி வீடு தகர்க்கப்படும்.. நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய போன்.. மர்ம நபரை தூக்கிய போலீஸ்
மும்பை: மும்பையில் உள்ள 27 மாடி கொண்ட அன்டிலா என்ற முகேஷ் அம்பானியின் வீட்டை குண்டு வைத்து தகர்த்துவிடுவதாக பீகாரை சேர்ந்த நபர் நள்ளிரவில் போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மும்பையில் உள்ள அல்டாமவுன்ட் ரோட்டில் பிரம்மாண்ட சொகுசு வீடு உள்ளது.

முகேஷ் அம்பானி வீடு
அன்டிலா என்ற பெயரிலான இந்த வீட்டை அம்பானி குடும்பத்தினர் பார்த்து பார்த்து கட்டினர். வீட்டிலேயே ஹெலிபேட் என இந்த வீட்டில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த வீடு 27 மாடிகளை கொண்டது. இந்த வீட்டில் 600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

குண்டு வைத்து தகர்த்துவிடுவதாக
இந்த நிலையில், மும்பையில் உள்ள Sir HN Reliance Foundation Hospital- மருத்துவமனைக்கு புதன்கிழமை மர்ம நபர் ஒருவர் இருமுறை போன் செய்துள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் போனை எடுத்ததும், முகேஷ் அம்பானியின் அன்டலியா வீட்டையும் இந்த மருத்துவமனையையும் குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு போனை வைத்துள்ளார். இதனால் பதறிப்போன மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பீகார் நபர் கைது
இதையடுத்து, பாதுகாப்பை அதிகரித்த போலீசார், தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்தது பீகாரை சேர்ந்த நபர் என்று தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு அண்மையில் இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அதிகரிப்பு
அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக தகவல் கிடைத்ததால், முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதேபோல், அவரது மனைவி நிதா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications