மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று பதவி ஏற்றார். சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளது.
இதன் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே அரசு நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஆளுநர் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டிருந்தார். மேலும் தற்காலிக சபாநாயகராக என்சிபி எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிவசேனா தலைவர் அப்துல் சத்தார் கூறுகையில், சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறக் கூடும். முன்பு எங்களுக்கு 162 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது.
தற்போது 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. ஆகையால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. 3 கட்சிகளும் இணைந்து 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தருவோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இதே ஆட்சி தொடரும் என்றார்.