ஃபட்னாவிஸை கைது செய்ய சதி செய்தார் உத்தவ் .. "நானே சாட்சி".. முதல்வர் ஷிண்டே திடீர் குற்றச்சாட்டு
"சிவசேனா பற்றி அவதூறாக பேசுவதை உத்தவ் தாக்கரேவும், அவரது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாங்கள் கையை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்"
மும்பை: "மகாராஷ்ட்ரா முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்த போது, பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸையும், கிரீஷ் மகாஜனையும் கைது செய்ய சதிச்செயலில் ஈடுபட்டார்" என தற்போதைய மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
சிவசேனா கட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சொந்தமானது என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஷிண்டே கைக்கு சென்ற சிவசேனா
மகாராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சியில் இருந்தபோது, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். பின்னர் பெரும்பாலான எம்எல்ஏக்களை தனது பக்கம் இழுத்த ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்கரே அணியும், ஏக்நாத் ஷிண்டே அணியும் சண்டையிட்டு வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேர்தல் ஆணையம், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குதான் சிவசேனா கட்சியும், அதன் சின்னமும் சொந்தம் என அறிவித்தது.

மாறி மாறி குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியானது முதலாக, உத்தவ் அணியும் ஷிண்டே அணியும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். குறிப்பாக, சிவசேனா கட்சியை சொந்தமாக்கிக் கொள்ள ஷிண்டே அணி ரூ.2000 கோடி வழங்கியதாக சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார். மேலும், தன்னை கொல்ல ஷிண்டே அணி சதி செய்வதாகவும் அவர் கூறினார்.

ஃபட்னாவிஸை கைது செய்ய சதி
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் (தற்போது துணை முதல்வர்), கிரீஷ் மகாஜன் (தற்போது அமைச்சர்) ஆகியோரை கைது செய்ய சதி செய்தார். இதனை நேரில் கண்ட சாட்சி நான். பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக இந்த செயலில் உத்தவ் தாக்கரே ஈடுபட்டார்.

"நிறுத்திக்கொள்ளுங்கள்"
இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் உரிய விசாரணை நடத்தி, அரசுப் பதவியை தவறாக பயன்படுத்த முயன்ற உத்தவ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிவசேனா பற்றி அவதூறாக பேசுவதை உத்தவ் தாக்கரேவும், அவரது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாங்கள் கையை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்" என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். தேவேந்திர ஃபட்னாவிஸை கைது செய்ய உத்தவ் சதி செய்ததாக ஷிண்டே கூறியது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications