தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்.. வேதாந்தாவின் நிகர லாபம் 46 சதவீதம் சரிவு
மும்பை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது உள்ளிட்ட சில காரணங்களால் வேதாந்தா நிறுவனத்தின் நிகர லாபம் 46 சதவீதம் வரை சரிந்து உள்ளது.
தொழில்அதிபர் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறி தூத்துக்குடி மக்கள் கடந்த ஆண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வேதாந்தா வருவாய் சரிவு
தற்போது வேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி உள்ளது. இதன்படி தற்போதைய காலாண்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட காரணத்தால் அதன் வருடாந்திர வருவாய் 15 சதவீதம் சரிந்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு இதே சமயத்தில் :ரூ.27,311 கோடியாக இருந்த வருவாய் தற்போது ரூ.23,092 கோடியாக சரிந்து உள்ளது.

நிகர லாபம் சரிவு
இதேபோல் வேதாந்தா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே சமயத்தில் ரூ. 4802 கோடியாக இருந்த நிலையில் இப்போது ரூ.2615 கோடியாக சரிந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சுமார் 46 சதவீதம் லாபம் சரிந்துள்ளது.

தேய்மானம்
இதேபோல் வட்டிக்கு முந்தைய வருமானம், வரிகள், தேய்மானம் மற்றும் மாற்றியமைத்தல் (EBITDA) ஆகியவற்றின் மூலம் வருமானம் 19 சதவீதம் சரிந்துள்ளது.. கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூ.7,767 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ. 6,330 கோடியாக குறைந்துள்ளது.

32 சதவீதம் சரிவு
2017-2018ம் ஆம் நிதியாண்டில் 10,342 கோடியாக இருந்த நிகரலாபம் 2019ம் நிதியாண்டில் 32 சதவீதம் சரிந்து ரூ.7,065 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல் கடந்த 2017-2018ம் ஆம் நிதியாண்டு வருவாய் 92.011 கோடியாக இருந்த நிலையில், இப்போது 2019ம் ஆண்டு 90,901 கோடியாக குறைந்துள்ளது.

வேதாந்தா கடன் உயர்வு
வேதாந்தா நிறுவனம் 2020 நிதியாண்டில் 1.4 பில்லியன் டாலர் முதலீடுகளை திரட்ட திட்டமிட்டுள்ளது. 31 மார்ச் 2019 நிலவரப்படி வேதாந்தா நிறுவனத்தின் கடன் தொகை ரூ.66 225 கோடியாக உள்ளது. வருடாந்திர அடிப்படையில் பார்த்தால் 8,066 கோடி கடன் உயர்ந்துள்ளது. எலக்ட்ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்தியது மற்றும் ஜிங்க் இந்தியா நிறுவனத்திடம் தற்காலிகமாக கடன் வாங்கியது உள்ளிட்ட காரணங்களால் கடன் தொகை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications