Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க இந்திக்கு எதிரானவர்கள் இல்லை.. முதல்வர் ஸ்டாலின் போஸ்ட்டுக்கு உத்தவ் தாக்கரே அணி எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ‛‛அவர்களின் (ஸ்டாலின்) இந்தி எதிர்ப்புக்கும், எங்களின் இந்தி எதிர்ப்புக்கும் வேறுபாடு உள்ளது. அவர்கள் இந்தி பேசமாட்டார்கள். யாரையும் இந்தி பேசவும் விடமாட்டார்கள். ஆனால் நாங்கள் இந்தி பேசுகிறோம். இதனால் தொடக்கப்பள்ளியில் இந்தியை கட்டாயமாக்குவதை மட்டுமே எதிர்க்கிறோம்'' என்று முதல்வர் ஸ்டாலின் போட்ட பதிவுக்கு உத்தவ் தாக்கரேவின் சிவசேனா யுபிடி அணியின் எம்பி சஞ்சவ் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்தி மொழி கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது. மும்மொழி கொள்கையின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

we-arent-anti-hindi-uddhav-sena-distances-from-tamil-nadu-cm-stalins-language-stance

இதற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சகோதரர் ராஜ் தாக்கரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாஜக அரசு அந்த முடிவை கைவிட்டது. இதையடுத்து சகோதரர்களான உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் தங்களுக்கு இடையேயான 20 ஆண்டு பகையை மறந்து நேற்று ஒரே மேடையில் இந்தி கட்டாயம் என்ற முடிவில் இருந்து பாஜக அரசை பின்வாங்க வைத்ததை ஒன்றாக கொண்டாடியது.

உத்தவ் தாக்கரே சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் மகன் ஆவார். தற்போது சிவசேனா (யுபிடி) அணியின் தலைவராக உள்ளார். பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் தான் ராஜ் தாக்கரே. இவர் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக உள்ளார். இவர்கள் 2 பேரும் 2005 முதல் பேசிக்கொள்வது இல்லை. இப்போது இந்தி எதிர்ப்பு இருவரையும் சேர்த்தது.

நேற்று வோர்லியில் உள்ள என்எஸ்சிஐ அரங்கில் இந்தி எதிர்ப்பின் வெற்றி விழாவில் இருவரும் மேடையில் ஒன்றாக தோன்றினர். அவாஜ் மராத்தி சா (வாய்ஸ் ஆப் மராத்தி) என்ற பெயரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்குவதை ஏற்க முடியாது என்று பேசினர். இதனை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இதுபற்றி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛ இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.

இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று (அதாவது நேற்று) மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. "உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!

இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்" என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்!

தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்!
ஒன்றிணைவோம் வா!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினின் போஸ்ட்டிற்கு உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். அதோடு அவரது பதிவு தொடர்பாகவும், அவர்களின் இந்தி எதிர்ப்பும் குறித்தும் பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ‛‛தாக்கரே சகோதரர்கள் தொடக்க பள்ளியில் இந்தி மொழியை திணிப்பதை மட்டுமே எதிர்க்கின்றனர். தென்மாநிலங்களின் இந்தி எதிர்ப்புக்கும், எங்களின் இந்தி எதிர்ப்புக்கும் வேறுபாடு உள்ளது. தென்மாநிலங்களில் இந்தி பேசமாட்டார்கள். யாரையும் இநு்தி பேசவும் விடமாட்டார்கள்.

ஆனால் எங்களின் நிலைப்பாடு அதுவல்ல. நாங்கள் இந்தி மொழியை பேசுகிறோர். மகாராஷ்டிராவில் இந்தி பேசும் மக்கள் உள்ளனர். தொடக்க பள்ளியில் இந்தி மொழியை திணிப்பதை தான் எதிர்க்கிறோம். இந்த விஷயங்களின் எங்களின் நிலைப்பாடு குறிப்பிடும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இந்தி பேசும் யாரையம் தடுப்பது கிடையாது. அதோடு இந்தி தியேட்டர், இந்தி மியூசிக் உள்ளிட்டவை உள்ளன. எங்களின் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது தொடக்க பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்குவதை எதிர்ப்பது மட்டுமே'' என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+