என்ன நடந்ததுனே தெரியலை.. மகாராஷ்டிரா தோல்வியால் புலம்பும் காங்கிரஸின் கேசி வேணுகோபால்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் என்ன நடந்தது என்று புரியவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் தோல்வி மட்டும் அல்ல.ஒட்டுமொத்த மகாவிகாஸ் அகாடியின் தோல்வியாகும். இந்த தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியது. மகாராஷ்டிராவில் 288 தொகுதி இருப்பதால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.
இந்நிலையில்தான் பாஜக கூட்டணி மொத்தமாக 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஆளும் கூட்டணியில் பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆளும் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் வாகை சூடி அசத்தி உள்ளது.
மறுபுறம் எதிர்க்கட்சியான ‛மகா விகாஸ் அகாடி' என்ற பெயரில் கூட்டணி அமைத்ததில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதன்மூலம் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சியின் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அடுத்த முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மகாராஷ்டிரா தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் மற்றும் அதனை கூட்டணி கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கேசி வேணுகோபாலிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கேசி வேணுகோபால், ‛‛என்ன நடந்தது என்று எங்களுக்கு புரியவில்லை. இது அதிர்ச்சியளிப்பதோடு, நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் தோல்வி மட்டும் அல்ல. ஒட்டுமொத்த மகா விகாஸ் அகாடியின் தோல்வியாகும்.முதலில் என்ன நடந்தது என்பது தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பான விபரங்களை கேட்போம்'' என்றார்.












Click it and Unblock the Notifications