வாரிசு அரசியல் டூ கூட்டணி வரை.. மகாராஷ்டிர குழப்பத்திற்கு காரணம்.. மற்ற கட்சிகளுக்கு ஒரு பாடம்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது மற்ற மாநிலக் கட்சிகளுக்கு ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.
Recommended Video
மகாராஷ்டிராவில் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக நீட்டித்த அரசியல் குழப்பம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், ஆளும் தாக்கரே தரப்பு விரும்பிய முடிவு கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக!
சுமார் 2.5 ஆண்டுகளுக்குப் பின்னர் தாக்கரே தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் வரும் நாட்களில் அரசியல் எப்படி இருக்கும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. ஆட்சி கவிழக் காரணமாக இருந்த அதிருப்தி எம்எல்ஏக்களில் பலருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். என்சிபி மற்றும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அமைதி காத்தே வருகிறது.
கற்க வேண்டியவை
இதனிடையே மகாராஷ்டிரா நிலைமையில் இருந்து மற்ற அரசியல் கட்சிகள் கற்க வேண்டிய விஷயம் என அரசியல் வல்லுநர்கள் சிவற்றை குறிப்பிடுகின்றனர். முதல் சிக்கல் குடும்ப அரசியல் இந்தியாவில் எல்லா கட்சிகளிலும் குடும்ப அரசியல் தவிர்க்க முடியாதது. என்றாலும் கூட ஒரு கட்சியில் பல குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அயற்சி அடைய வாய்ப்புகள் அதிகம்.
குடும்ப அரசியல்
அதாவது, கட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறுப்பினர்களால் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே மிக ஆழமான இடைவெளி எழுகிறது. இதுபோல ஏழும் இடைவெளியை ஒரு கட்டத்திற்குப் பின்னர் நிரப்புவது மிக மிகக் கடினம். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவுக்கு அது தான் நடந்து. அதிருப்தியாளர்கள் பலரும் ஆதித்ய தாக்கரே முன்னிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
கூட்டணி
அடுத்து சித்தாந்த ரீதியாக ஒத்துப் போகாத கட்சிகளின் கூட்டணி எப்போதும் ஆபத்தானது தான். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தது. சிவசேனா இந்துத்துவ சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி. அதேசமயம் காங்கிரஸ் மற்றும் என்சிபி மதச்சார்பற்ற கட்சிகள்.
குழப்பம்
மூன்று கட்சிகளின் கூட்டணி மேல்மட்டத்தில் சுமுகமாக இருப்பதைப் போலவே தெரிந்தாலும் உள்ளே புகைச்சல் இருந்து கொண்டு தான் இருந்தது. என்சிபி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிவசேனா கட்சியினரை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருந்தது. மேலும், சிவசேனா வலுவான இடங்களில் என்சிபி வளர முயல்வதாகவும் சிவசேனா தொண்டர்கள் குற்றஞ்சாட்டினர்.
ட்விஸ்ட்
அதேபோல மகாராஷ்டிரா அரசியல் சூழல் மற்ற மாநிலக் கட்சிகளுக்கும் ஒரு பாடம். கடந்த வாரம் வரை, சிவசேனா முழுக்க முழுக்க தாக்கரே கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக நினைத்தார்கள். ஆனால், வெறும் சில நாட்களில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. 3இல் இரு பங்கிற்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஷிண்டே பக்கம் சென்றுள்ளனர். இந்த நிலை, திரிணாமுல் தொடங்கி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை தேவை!