ஆட்டோ டிரைவர் டூ மூத்த அமைச்சர்! சிவசேனாவை திணறிவிடும் ஷிண்டே! யார் இவர்? தாக்ரே மீது கோபம் ஏன்
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது அரசியல் குழப்பத்திற்கு வித்திட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே யார் என்று பார்க்கலாம்!
மகாராஷ்டிராவில் இப்போது பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. ஆளும் கூட்டணியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள் மாயமாகி உள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
இதனால் அங்குள்ள சிவசேனா- என்சிபி-காங்கிரஸ் கூட்டணி அரசே கவிழும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே
இப்போது அங்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே என்பவரே முக்கிய காரணம். கடந்த பிப்.29ஆம் தேதி ஷிண்டே தனது 58 பிறந்த நாளை கொண்டாடினார். அந்த சமயத்தில் தானேவில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் ஷிண்டே"வருங்கால முதல்வர்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த 2019 மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்குப் பின்னரும் கூட, தானேவில் இதேபோன்ற போஸ்டர்கள் முளைத்து இருந்தது. இப்போது அது நினைவாகும் சூழலும் கூட ஏற்பட்டுள்ளது.

ஒரே வாரம்
ஷிண்டே முதலில் சில எம்எல்ஏக்கள் உடன் மாயமானதாகச் செய்திகள் வெளியான போது, இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று சிவசேனா தலைவர்கள் எதிர்பார்த்து இருந்ததை போலவே அவர்களது ரியாக்ஷன் இருந்தது. ஆனால், இது நடந்துள்ள நேரம் தான் ஆச்சரியமாக உள்ளது. ஏனென்றால், கடந்த வாரம் ஆதித்யா தாக்கரே அயோத்தி சென்ற போது, ஷிண்டே அவரை சுற்றியே இருந்தார். ஒரே வாரத்தில் இப்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். இதையடுத்து சிவசேனா அவரை மகாராஷ்டிர சட்டசபையின் அவைத் தலைவர் மற்றும் கட்சியின் தலைமைக் கொறடா பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

ட்வீட்
இப்படிப்பட்ட சூழலில் தான் ஏக்நாத் ஷிண்டே நேற்றைய தினம் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் ஒன்றைச் செய்து இருந்தார். அவர் தனது ட்விட்டரில், "நாங்கள் பாலாசாகேப்பின் உறுதியான சிவ சைனிகள். பால்தாக்கரே எங்களுக்கு இந்துத்துவத்தை கற்றுக் கொடுத்துள்ளார். அதிகாரத்திற்காக பாலாசாகேப்பின் எண்ணங்கள் மற்றும் ஆனந்த் திகே சாஹேப்பின் போதனைகளை நாங்கள் ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம்" என்று பதிவிட்டு இருந்தார்.

ஆட்டோ ஒட்டுநர்
ஆட்டோ ஒட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஷிண்டே இந்த நிலைக்கு வெகு தூரம் பயணித்து வந்துள்ளார். 1980களில் தானேயில் ஷகாவிற்கு தலைமை தாங்கிய அவர், 2004இல் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு தானே மாநகராட்சியில் கார்ப்பரேட்டர் ஆனார். தானே முனிசிபல் கார்ப்பரேஷனில் அவர் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மூன்று ஆண்டுகளாக சிவில் ஏஜென்சி நிலைக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர சட்டசபையின் அவைத் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

அதிருப்தி
2004 முதல், அவர் தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, கல்யாண் தொகுதியில் இருந்து சிவசேனா சார்பில் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளார். கட்சித் தலைமை தன்னை ஒதுக்குவதால் கடந்த சில காலமாகவே ஷிண்டே தலைமை மீது வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக முக்கிய முடிவுகளை முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்ரே மற்றும் போக்குவரத்து அமைச்சர் அனில் பராப் எடுக்கத் தொடங்கியது அதிருப்தியை அதிகப்படுத்தி உள்ளது.

சிவசேனா முகம்
மும்பையின் துணை நகரமான தானேவில் சிவசேனாவின் முகமாக இருக்கும் மூத்த தலைவர் தான் இந்த ஷிண்டே. இதனால் தான் இப்போது பெரும் சிக்கல் உருவாகி உள்ளது. கடந்த 2014இல், சிவசேனாவும் பாஜகவும் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் தான் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கமாட்டார். இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்த சமயத்தில் அமைச்சரானார்.

காரணம் என்ன
2024 சட்டமன்றத் தேர்தலுக்கான அரை இறுதியாகக் கருதப்படும் உள்ளாட்சித் தேர்தலுக்கு சிவசேனா தயாராகி வரும் நிலையில் தான் ஷிண்டே இப்போது போர்க்கொடி தூக்கி உள்ளார். ஷிண்டே இப்போது போர்க் கொடி தூக்க மும்பை-நாக்பூர் விரைவுச்சாலை விவகாரம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. அனைத்தையும் விட பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது ஷிண்டேவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதன் வெளிப்பாடாகவே இப்போது ஷிண்டே தலைமை எதிராகக் கலகம் செய்துள்ளார்.

அடுத்து என்ன
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2020இல் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது ஜோதிராதித்ய சிந்தியா அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் ஐக்கியமானதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மத்தியப் பிரதேசத்தைப் போல மகாராஷ்டிராவிலும் ஆட்சி மாறுமா இல்லை உத்தவ் தாக்ரே கை ஓங்குமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications