பால்தாக்கரே இந்துத்துவத்தை கற்று தந்துள்ளார்.. அதை எப்போதும் மீற மாட்டோம்! குழப்பும் ஏக்நாத் ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிர அரசியலில் இப்போது குழப்பமான அரசியல் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டே பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 முதல் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்து வருகிறது.
கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தில் நடந்தது போல இல்லாமல் சுமார் 3 ஆண்டுகளாக அங்குக் கூட்டணி ஆட்சி சுமுகமாகவே சென்று கொண்டு இருந்தது.

மகாராஷ்டிரா
இருப்பினும், கடந்த சில வாரங்களாகவே அங்கு சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் முதல் வெளிப்பாடாகக் கடந்த மாதம் ராஜ்ய சபா தேர்தலில் சில சிவசேனா உறுப்பினர்கள் பாஜகவுக்கு வாக்களித்தாக கூறப்படுகிறது. இதனால் பாஜக கூடுதலாக ஒரு இடத்தில் வென்று இருந்தது. அதேபோல நேற்று நடைபெற்ற சட்ட மேலவை தேர்தலிலும் பாஜகவுக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்தது.

மாயம்
இது மத்தியப் பிரதேசம், கர்நாடகா மாநிலத்தில் நடந்த அதே நிலை மகாராஷ்டிராவில் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாயமாகி உள்ளார். அவரை சிவசேனா தரப்பால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து சுமார் 13 சிவசேனா எம்.எல்.ஏக்கள் திடீரென காணாமல் போகியுள்ளனர்.

எங்கே
அவர்களைத் தொடர்பு கொள்ள சிவசேனா எடுத்து வரும் முயற்சிகளும் பலன் இல்லை. அவர்கள் அனைவரும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எம்எல்ஏக்கள் மாயமாவதைத் தடுக்கும் வகையில் சிவசேனா தனது கட்சியின் மற்ற எம்எல்ஏக்களை சூரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது.

சஞ்சய் ராவத்
இது தொடர்பாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், "(தலைமறைவான அமைச்சர்) ஏக்நாத் ஷிண்டேவை எனக்கு நன்றாகத் தெரியும்.. அவர் ஒரு உண்மையான சிவசேனா ஆள். அவர் எந்த நிபந்தனையும் இல்லாமல் நிச்சயம் திரும்புவார். கூட்டணி அரசு அமைந்த போதும், இதேபோன்ற முயற்சியை பாஜக மேற்கொண்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இப்போது மீண்டும் அதே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது மத்திய பிரதேசம் இல்லை மகாராஷ்டிரா" என்று கூறி இருந்தார்.

ட்வீட்
இந்தச் சூழலில் ஏக்நாத் ஷிண்டே சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "நாங்கள் பாலாசாகேப்பின் உறுதியான சிவ சைனிகள். பால்தாக்கரே எங்களுக்கு இந்துத்துவத்தை கற்றுக் கொடுத்துள்ளார். அதிகாரத்திற்காக பாலாசாகேப்பின் எண்ணங்கள் மற்றும் ஆனந்த் திகே சாஹேப்பின் போதனைகளை நாங்கள் ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

நீக்கம்
மகாராஷ்டிராவில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்பாக சிவசேனாவின் உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தீவிர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக சிவசேனாவின் புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராக செவ்ரி எம்எல்ஏ அஜய் சவுத்ரி செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications