மார்ச் 18, மாலை 6 மணி வரை காத்திருங்க.. யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்
மும்பை: வராக்கடனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கிக்கு முதலீடுகள் குவிந்து வருவதால் வரும் மார்ச் 18ம் தேதி முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட உள்ளது. அன்று முதல் வங்கி வழக்கமான சேவைகளுடன் செயல்பட உள்ளது.
அதிக வாராக்கடன் சுமையால் திவால் நிலைக்கு சென்றது யெஸ் வங்கி. இதையடுத்து பலரும் வங்கியில் இருந்து முதலீடுகளை வேகமாக திரும்பபெற முயன்ற நிலையில் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அத்துடன் யெஸ் வங்கியின் தற்போதைய நிர்வாகியான பிரசாந்த் குமாரை மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது.

அத்துடன் வாடிக்கையாளர் டெபாசிட் மற்றும் முதலீடுகளை பாதுகாக்க சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி ஏப்ரல் 3ம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க தடை விதித்தது.
இதற்கிடையே பாரத ஸ்டேட் வங்கி உள்பட 7 முதலீட்டாளர்கள் யெஸ் வங்கியில் மொத்தம் ரூ.11,750 கோடி முதலீடு செய்ய முடிவு செய்தன. ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை தலா ரூ.1,000 கோடி முதலீடு செய்து 6 சதவீத பங்குகளை வாங்க முன்வந்தன. ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி ஆகியவை தலா ரூ.500 கோடி முதலீடு செய்து 3 சதவீத பங்குகளை வாங்குவதாக அறிவித்துள்ளன. இதனால் யெஸ் வங்கி இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது.
இதற்கிடையில் ரிசர்வ் வங்கி தனது மறு சீரமைப்பு திட்டதை மத்திய அரசிடம் அளித்தது அதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மார்ச் 18ம் தேதி முதல் வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. மார்ச் 18ம் தேதி மாலை 6 மணியுடன் அனைத்து கட்டுப்பாடுகளைம் விலக்கி கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக வங்கி சீரமைப்பு திட்டத்தை மார்ச் 13ம் தேதி அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசு, கட்டுப்பாடுகளை மார்ச் 18ம் தேதியுடன் நீக்கி வங்கி தொடர்ந்து வழக்கம்போல் செயல்படும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications