மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 11 பேர் கைது.. இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!
நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. நாகையைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 11 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் மீது மூன்று முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டு, இலங்கை சிறையில் ஏற்கனவே 64 மீனவர்கள் உள்ள நிலையில் தற்போது 11 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 75 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











Click it and Unblock the Notifications