நாகையில் விஜய் பிரச்சாரம்! தவெக தொண்டர்களால் திருமண மண்டப சுற்று சுவர் சேதம்! போலீசார் வழக்குப்பதிவு
நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த பிரச்சாரத்தின்போது, மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனையடுத்து தவெகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. தவெக எனும் புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய், மக்களை சந்தித்து பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று நாகப்பட்டினம் சென்ற விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

"தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாகையில், நவீன வசதியுடன் மீன்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து குரல் கொடுப்பது நமது கடமை. நாகையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே, மீனவர்கள் தாக்கப்பட்டவை கணித்து பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் எப்போதும் மக்கள் பக்கம்தான் இருக்கிறேன்.
மீனவர்கள் பிரச்சினையில் திமுக நாடகமாடுகிறது. முதல்வரே நேரடியாகவே நான் கேட்கிறேன், நீங்கள் மிரட்டி பார்க்கிறீர்களா? குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருக்கும் எனில்.. சொந்தமாக உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்? மக்களை சந்திக்க அனுமதி கேட்கும் இடத்தில் அனுமதி வழங்காமல், நெருக்கடியாக உள்ள இடத்தில் அனுமதி தருகிறீர்கள். இந்த அடக்குமுறை அராஜகமெல்லாம் தவறானது. நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி. 2026 இல் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி" என்று விமர்சித்திருந்தார் விஜய்.
விஜய்யை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு இருந்ததால், நாகப்பட்டினம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அதை காண வந்த கட்சியினர் மாதா திருமண மண்டபத்தின் சுற்று சுவர் மீது ஏறி அமர்ந்திருக்கின்றனர். இதனால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மண்டபம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமானதாகும். இந்த சம்பவம் தொடர்பாக நாகை டவுன் காவல் நிலையத்தில் மண்டபம் மேலாளர் புகார் கொடுத்திருக்கிறார். அதில் மண்டபத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதனையடுத்து பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், ஆபாச வார்த்தைகளில் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தவெகவினர் மீதும் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொது சொத்துக்களை சேதப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால் சேதப்படுத்தியவர்களிடமிருந்து முழு இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தவெகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications