அணை கட்டினா ஆறு செத்துடும்.. சீமான்.. திண்டுக்கல்லில் அணை கட்டுவேன்.. இது மன்சூர் அலிகான்!
நாகப்பட்டினம்: ஆற்றின் குறுக்கே அணை வேண்டுமா? வேண்டாமா என்பதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அந்த கட்சியின் திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் இடையே சுவாரஸ்ய முரண் ஏற்பட்டுள்ளது.
நாகையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "என் கையில் ஓடிக்கொண்டிருக்கும் நரம்பில் ஒரு ஸ்ட்ரோக் வந்தால் கை செயல் இழந்து விழுந்துவிடும். அதுபோல் ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அடுத்த பகுதியில் இருக்கும் ஆறு செத்துவிடும். பூமி செத்துவிடும் என்கிறார்கள்.
எனவே இந்த உயிரியல் உண்மையை நான் புரிந்து கொள்ள வேண்டும். தண்ணீரை அணை கட்டாமல் ஓட விடுங்கள். அதன் போக்கிலே ஓட விட்டு திருப்பிக் கொள், 5 ஆயிரம் ஏக்கர் ஏரியா அங்கே தேக்கிக்கொள், 2 ஆயிரம் ஏரியாக இங்கே தேக்கிக்கொள், குளம், குட்டை, கண்மாய் என அதன் போக்கில் ஓட விடுங்கள். பூமி முழுவதும் நீரை ஓட விட்டால் தான் நிலத்தடி நீர் எல்லா பகுதிக்கும் சமமாக உயரும்" இவ்வாறு கூறினார்.
விளையாட விடு.. என்னை விளையாட விட்டு பாரு.. அதைவிட்டுட்டு என் சின்னத்தை மறைக்கிறே?.. சீமான் ஆவேசம்
இதனிடையே திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் பேசுகையில், "செந்துறையில் கடல்சார் விஞ்ஞானி பாலு இருக்காரு. அவர் திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். அங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய அணை கட்ட திட்டம் கொடுத்துள்ளார். வெறும் ரூ.10 கோடியில் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்ய செந்துறையில் அணை கட்ட முடியும். அதை கட்டுவேன்.
திண்டுக்கல் பகுதியில் உள்ள ஆறுகளை இணைந்து தூர்வாருவேன். 40 ஆண்டுகளாக தூர்வாராமல் பல அணைகள் இங்கு உள்ளது. அவற்றை மக்களை பயன்படுத்தி தூர் வாருவேன். இதன் மூலம் காண்ராக்ட் மற்றும் டெண்டர் சிஸ்டத்தை ஒழித்து விடுவேன்" என்றார். சீமான் அணை வேண்டாம் என்க, மன்சூர் அலிகான் அணை வேண்டும் என்று கூற சுவாரஸ்யமான முரணாக இது மாறியுள்ளது.