நாகை மீனவர்கள் 6 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணைக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றுள்ளது.
இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், தாக்குவதும், அவர்களது வலைகளை கிழிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் என பல ஆண்டுகளாக அராஜகம் செய்தது இலங்கை கடற்படை.

அந்த வகையில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகுகள் மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25 -ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். மீதம் உள்ள மீனவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கொழும்புவில் இருந்து, 47 மீனவர்களும் நேற்று விமானம் மூலம் புறப்பட்டு காலை 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்திறங்கினர். அங்கிருந்து ராமேசுவரம் மீனவர்கள் 37 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேரும் மீன்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இலங்கை சிறையில் இன்னும் நாகை மற்றும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 44 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி நம்புதலையை சேர்ந்த நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றது. அவர்களை மார்ச் 4 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: ஆறுமுகம் மனோஜ்குமார் (26), சுப்பையா முத்துக்குமார் (34), தொசண்டிமுத்தன் கம்மான்கரையான் (60), சக்கத்து ராஜபூபதி (34), மாணிக்கவேல் ரங்கதுரை (48), காளி பாலு (45) ஆகிய 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications