அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு.. வேதாரண்யம், கோவையில் போராட்டம்.. போலீஸ் குவிப்பு!
டாக்டர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து வேதாரண்யம் மற்றும் கோவையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Recommended Video
வேதாரண்யம்: டாக்டர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து வேதாரண்யம் மற்றும் கோவையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நேற்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. வேதாரண்யத்தில் நேற்று இரவு இருதரப்பினரிடையே பெரிய அளவில் மோதலும் கலவரமும் ஏற்பட்டது. சிறிய சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட சண்டை ஜாதி கலவரமாக உருவெடுத்தது.
அந்த பகுதியை சேர்ந்த இரண்டு தரப்பினரும் மாறி மாறி சாலையில் இறங்கி சண்டை போட்டு இருக்கிறார்கள். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரண்டு பிரிவினரும் மாறி மாறி பொது சொத்துக்களை சேதப்படுத்தி சண்டை போட்டு உள்ளனர்.
இந்த சண்டையில் ஒரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதே சமயம் தற்போது வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
தமிழக அரசு சார்பில் விரைவாக புதிய சிலை நிறுவப்பட்டது . அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனாலும் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. கோவையிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் 2 அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
போராட்டத்தால் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலத்தில் அரசு பேருந்து மீது கல்வீசியதாக விசிகவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் தமிழகத்தில் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.