பெரியார் சிலைக்கு காவிச் சாயம்... கோயில் முன்பு கொளுத்திய டயர் வீச்சு...கோவையில் பரபரப்பு!!
கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது நேற்று காவிச் சாயம் பூசி இருந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, கோவையில் கோயில்கள் முன்பு டயரைக் கொளுத்தி வீசிச் சென்று இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் இருக்கும் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவிச் சாயம் வீசி இருந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, திக, திமுக, விசிக, மதிமுக மற்றும் பெரியார் தொண்டர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் குனியமுத்தூர் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் போலீஸில் சரணடைந்தார்.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னதாக முதல்வர் பழனிசாமி நேற்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கோவை ரயில்நிலையம் முன்புள்ள விநாயகர் கோயில் முன்பு கொளுத்திய டயர்களை வீசிச் சென்றனர். இதேபோல், டவுன்ஹாலில் இருக்கும் மாகாளியம்மன் கோயில் முன்பும் மர்ம நபர்கள் கொளுத்திய டயர்களை வீசிச் சென்றுள்ளனர். மேலும் அங்கிருக்கும் மாகாளியம்மன் கோயிலின் வேல் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் சாமி சிலையின் புடவையையும் எரித்து சென்றுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அங்கு இருக்கும் சாலையோர பஞ்சர் கடையில் இருந்து டயர்களை எடுத்து எரித்து கோயிலுக்கு முன்பு ஒருவர் வீசுவது அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி இருப்பதாக அந்த சேனல் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த சேனலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications