கண்ணுல பயம் தெரியுது பாருங்க! கச்சத்தீவு மேட்டர்ல எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.. சீறிய அண்ணாமலை
நாகர்கோவில்: கச்சத்தீவு வரலாறு குறித்து பாஜகவுக்கு திமுக பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நேற்று நடத்திய மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14,000 பேருக்கு ரூ.88 கோடியே 90 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாம்பனில் பாஜ சார்பில் 'கடல் தாமரை' போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மறைந்த சுஷ்மா சுவராஜ் இங்கே வந்திருந்தார். ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார். இந்த 9 ஆண்டு காலத்தில் இது நடந்திருக்கிறதா?
2014ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்ததற்குப் பின்னால்தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கிறது. கைது, தாக்குதலை தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை இலங்கை அரசு பறித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. படகுகளை அரசுடைமையாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கு காரணம் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததுதான். திமுகவின் கடுமையான எதிர்ப்பை மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாளில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். ஆனால் அந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான். இந்த அதிமுகதான் தற்போது பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது" என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, "கச்சத்தீவு வரலாறு குறித்து பாஜகவுக்கு திமுக பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை" கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கச்சத்தீவை கொடுத்தது திமுக. அதை திருப்பி திமுகவால் வாங்க முடியாது. அதை எப்படி கொண்டுவருவது என்று எங்களுக்கு தெரியும். அதை ஒருநாள் கொண்டு வருவோம். அதேபோல பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா? திருநெல்வேலியிலிருந்து போட்டியிடுகிறாரா? அல்லது கன்னியாகுமரியா? வாரணாசியா என யாருக்கும் தெரியாது.
நாடு முழுவதும் 543 தொகுதிகள் இருக்கிறது. அதில் எந்த தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்வார். ஆனால் ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட்டுவிடுவாரோ? என்கிற பயத்தில் திமுகவின் பூத் மாநாட்டை ராமநாதபுரத்தில் கூட்டுகிறார். அப்படியெனில் எந்த அளவுக்கு முதலமைச்சரின் கண்ணில் பயம் இருக்கிறது என்று பாருங்கள்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications