குவைத்தில் இருந்து பெண்களின் ஆபாச வீடியோக்களை சமூகவலைதளங்களில் அப்லோடு செய்த காசியின் நண்பர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து காசி எடுக்கும் ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக அவரது நண்பர் கவுதமை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவருக்கு 26 வயதாகிறது. இவர் சமூகவலைதளம் மூலம் பெண்களிடம் பழகியுள்ளார். காசி தனது அழகை வைத்து நிறைய பெண்களை காதல் வலையில் விழ வைத்தார்.
தன்னை ஒரு பணக்காரர் போல் சித்தரித்துக் கொண்டார். அவ்வாறு காதல் வலையில் விழும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு அவர்களை ஆபாச புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது.
கந்துவட்டி கொடுமை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி.. துடித்து போன தூத்துக்குடி
100 க்கும் மேற்பட்ட பெண்கள்
இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களை இவர் தனது காதல் வலையில் வீழ்த்தினாராம். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் கந்து வட்டி புகாரின் பேரிலும் காசி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை
நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட காசியின் கைகளில் விளங்கு போடப்பட்டிருந்த நிலையிலும் கைகளில் ஹார்டின் சிம்பலை காட்டி கெத்து காட்டினார். இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் இவரால் ஜாமீனில் வெளியே வர முடியவில்லை. இவரது லேப்டாப்பில் இருந்த காசிக்கு எதிரான ஆதாரங்களை அவரது தந்தை அழித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்படி அவரையும் கைது செய்தனர்.
உடல்நலம்
அண்மையில்தான் அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீனில் வெளியே அனுப்பினர். காசி மீதான பாலியல் வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காசிக்கு பாலியல் குற்றங்களுக்கு உறுதுணையாக அவருடைய 3 நண்பர்கள் ஜினோ, தினேஷ், கவுதம் ஆகியோர் இருந்தனர். இவர்களில் ஜினோ, தினேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்துவிட்டனர்.
கவுதமை தேடிய போலீஸ்
ஆனால் கவுதமை போலீஸார் தேடி வந்தனர். குவைத்தில் வேலை பார்த்து வந்த கவுதம், காசியின் அறிவுறுத்தலின் பேரில் பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், கவுதமை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
குவைத் நாட்டில்
இந்த நிலையில் குவைத் நாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கவுதம் வந்திருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் கவுதமை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். இவர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கவுதமை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டது. இவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல ரகசியங்கள் வெளியே வரும் என தெரிகிறது.