அந்த வீடியோவை அவரா உருவாக்குனாரு? அராஜகம் பண்ணாதீங்க.. கனல் கண்ணன் கைதுக்கு இந்து முன்னணி எதிர்ப்பு!
நாகர்கோவில்: கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. கனல் கண்ணன் வீடியோவை பகிரத்தான் செய்தார், அதற்காக அவரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் என விமர்சித்துள்ளது இந்து முன்னணி.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி இருந்தார். கிறிஸ்தவ மதபோதகர் குறித்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனல் கண்ணன் கிறிஸ்தவ மதத்தை அவமதித்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 10ஆம் தேதி கனல் கண்ணனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநிலத் தலைவர் கனல் கண்ணனை, நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பல ஆயிரம் நபர்களால் பதிவிடப்பட்ட ஒரு வீடியோவை கனல் கண்ணன் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சியை அவர் உருவாக்கவில்லை, எடிட் செய்யவும் இல்லை. அவரது பதிவில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு, எந்த வாசகமும் இல்லை.
அவரது செயல் எந்த விதத்திலும் சட்டப்படியான குற்றச்செயல் அல்ல. திமுக பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நல்ல எண்ணத்துடன் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு கனல் கண்ணன் சென்றார்.
அங்கு அவரை நடத்திய விதம், அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை, இந்து விரோத போக்கை சுட்டிக்காட்டுபவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாடு அரசின் இச்செயல், கருத்து சுதந்திரத்தை பறித்து, ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயலாகும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications