ரஜினி பிறந்தநாளில் அனைவருக்கும் இலவச டீ... பட்டய கிளப்பும் கன்னியாகுமரி ரசிகர்!
நாகர்கோவில்: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் டீக்கடை நடத்தி வரும் அவரது தீவிர ரசிகர் ஒருவர், இன்று அனைவருக்கும் இலவச டீ வழங்கி வருகிறார்.
Recommended Video

ரஜினிகாந்த் அரசியல் பணி துவங்கிய பிறகு அவரை பிரபலப்படுத்தும் வகையில் இயன்ற அளவுக்கு இது போன்ற பல்வேறு உதவிகளை புரிய உள்ளதாகவும் அந்த ரசிகர் தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அதே பகுதியில் டீக்கடை நடத்திவரும் இவர் கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்த நாளின்போதும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியும் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வந்தார்.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி தனது டீக்கடையில் அனைவருக்கும் இலவசமாக டீ வழங்க நாகராஜன் முடிவு செய்தார். அதன்படி அவர் இன்று டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார். இதுதொடர்பாக கடையில் அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டியுள்ள நாகராஜன், நடிகர் ரஜினிகாந்துடன் தான் சந்தித்த போட்டோவையும் கடையில் மாட்டி வைத்துள்ளார்.

மேலும், ரஜினி அரசியல் வரவேற்பு குறித்த போஸ்டரும் அவரது கடையின் முன்பு ஒட்டப்பட்டு உள்ளது. இது குறித்து நாகராஜன் கூறுகையில், ரஜினிகாந்த் பிறந்தநாளுடன், அவர் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்து உள்ளதால் அதனை கொண்டாடும் வகையில் அனைவருக்கும் இலவச டீ வழங்கி வருகிறேன். தலைவர் ரஜினிகாந்த் அரசியல் பணி துவங்கிய பிறகு அவரை பிரபலப்படுத்தும் வகையில் என்னால் இயன்ற அளவுக்கு இது போன்ற பல்வேறு உதவிகளை புரிய உள்ளேன் என்று நாகராஜன் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications