நாகர்கோவிலில் நீதிபதியை அதிரவைத்த வழக்கு.. குற்றவாளிக்கு மூன்று விதமான தண்டனை வழங்கி தீர்ப்பு
நாகர்கோவில்: குமரியில முழு சொத்தையும் அபகரிக்க திட்டம் போட்டு தந்தையை தீ வைத்து கொலை செய்ததோடு சகோதரி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த விஜயகுமார் என்பவருக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கி நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தண்டனையை குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு தனது தவறை குற்றவாளி உணரும் விதமாக அவரை ஒவ்வொரு மாதமும் 5 நாள் தனிமை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் பொன்னையா (72), சிறு வயது முதலே கடுமையாக உழைத்து பல்வேறு சொத்துக்களை வாங்கிய பொன்னையா அதனை தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுக்க முயன்ற போது அவரது 3 ஆவது மகன் விஜயகுமார் (39) சொத்துக்களை பிரிக்க கூடாது, அனைத்து சொத்துக்களையும் தன்னிடம் தர வேண்டும் என கூறி வந்துள்ளார்,
இது தொடர்பாக விஜயகுமார் தனது தந்தை பொன்னையாவை தாக்கிய நிலையில் இது குறித்து பொன்னையா காவல்நிலையத்தில் புகார் அளித்தார் இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பொன்னையாவிடம் தகராறு செய்து அவரை தீ வைத்து கொளுத்தினர், மேலும் தனது சகோதரியிடம் சென்று சொத்தை தனக்கு தரவில்லை என்றால் குடும்பத்தை காலி செய்து விடுவதாக கூறியதால் அவரது சகோதரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இது தொடர்பாக கடந்த 19-03-14 அன்று வழக்கு பதிவு செய்த ஈத்தாமொழி போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர், இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் சொத்துக்காக தந்தையை தீ வைத்து கொலை செய்ததோடு, தங்கையை தற்கொலை செய்ய வைத்த குற்றத்திற்காக குற்றவாளி விஜய குமாருக்கு 3 பிரிவுகளின் கீழ் 1 வருடம், 7 வருடம், மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார், மேலும் சொத்துக்காக தந்தையை கொலை செய்தது சகோதரியை தற்கொலை செய்ய வைத்தது தனது அனுபவத்தில் அரிதானது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். குற்றவாளி தனது குற்றத்தை நினைத்து மனம் வருந்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 20 ஆம் தேதிக்குள் 5 நாட்கள் தனிமை சிறையில் அடைக்கவும், குற்றவாளியிடம் இருந்து அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அதனை கொலை செய்யப்பட்ட பொன்னையாவின் மற்ற வாரிசுகளுக்கு பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications