விபத்து நடந்ததுபோல் நாடகமாடி வழிப்பறி செய்துவிட்டு தப்பிய இருவர் விபத்தில் பலி! நாமக்கல் அருகே ஷாக்!
நாமக்கல்: நாமக்கல் அருகே விபத்தில் சிக்கியது போல் நாடகமாடி தொழிலாளியிடம் பணம், செல்போனை பறித்துக்கொண்டு டூ வீலரில் தப்பிய 2 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் கோட்டை தெருவை சேர்ந்தவர் நவீன் (31). இவர், சென்னையை சேர்ந்த நண்பரான மாரி (25) என்பவருடன் நேற்று டூ வீலரில் வெளியே சென்றார். அப்போது நாமக்கல் மோகனூர் சாலை கணவாய்பட்டி பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே நவீன் மற்றும் மாரி இருவரும் டூவீலரில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது போல் நடித்தனர்.

அந்த வழியாக வந்த தொழிலாளி பொன்னார் (31) என்பவர் இதைப் பார்த்து இருவருக்கும் உதவச் சென்றுள்ளார். அப்போது 2 பேரும் பொன்னாரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்துக் கொண்டு வண்டியில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சிறிது தூரத்தில் அவர்கள் சென்ற பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மாரி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த நவீன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் பணம், செல்போனை பறித்துச் சென்ற இருவர் கண் முன்னே விபத்தில் சிக்கி பலியானதை பார்த்துள்ளார் பொன்னார். இந்தச் சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications