துருவ துருவ குழந்தை புரோக்கர்கள்.. ஈரக்குலை நடுங்கும் குழந்தை கடத்தல்..துணை புரோக்கர்கள் மூவர் கைது
Recommended Video
நாமக்கல்: ராசிபுரம் குழந்தை கடத்தல் விவகாரத்தில் மேலும் 3 துணை புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா. இவர் அண்மையில் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும் பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் என்றும் நிறம், எடைக்கேற்ப விலை கூடும், குறையும் என அவர் பேசிய விதம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இதையடுத்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேர் கைது
இந்த நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக குமாரபாளையம், பவானி, திருச்செங்கோட்டை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை குழந்தை கடத்தல் விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம்
தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், அருள்சாமி, ஹசீனா ஆகியோர்கள் துணை புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது. மேற்படி மூவரும் ஈரோடு, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் தனியார் செயற்கை கருத்தரிப்பு செய்யும் மருத்துவமனைகளில் குழந்தை இல்லாதவர்களுக்கு கருமுட்டை கொடுத்து அதற்கு ரூபாய் 12,000 முதல் 20,000 வரை பணமாக பெற்று வந்துள்ளனர்.

கமிஷன்
பின்னர், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பிரிந்து வாழும் பெண்களை கருமுட்டை தானம் செய்ய அழைத்துச் சென்று புரோக்கர்களாக செயல்பட்டு அவ்வாறு கருமுட்டை தானம் செய்யும் ஒரு பெண்ணிற்கு கமிஷனாக ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை பெற்று வந்துள்ளனர்.

குழந்தைகளை கொடுத்த 3 பேர்
அக்காலகட்டத்தில் செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறையில் குழந்தை பிறக்காது என தெரிந்த தம்பதியினரிடம் நட்பு ஏற்பட்டு குழந்தைகளை வாங்கித் தருவதாக கூறிவந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் பின்னர் குழந்தைகளை விற்பதற்கு துணை புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
துணை புரோக்கர்கள் பர்வீன், அருள்சாமி மற்றும் ஹசீனா ஆகியோர்களை தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்கண்ட மூவரும் பல துணை புரோக்கர்களிடமும், உறவினர்களிடமிருந்தும் குழந்தைகளை பெற்று கொடுத்துள்ளனர்.

உடந்தை
இவர்கள் மூலம் சுமார் 12 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதில் ஒரு குழந்தை கொல்லிமலையில் பெறப்பட்டு, தென்மாவட்டம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. அப்போது குழந்தை தத்து ஆவணம் என அரசின் உரிய அனுமதியின்றி வாங்கும் பெற்றோர் மற்றும் தத்து கொடுக்கும் பெற்றோர் கையொப்பத்துடன் புகைப்படம் ஒட்டி நோட்டரி வழக்கறிஞர் ஊ.வெங்கடாஜலம், சின்ன முதலைப்பட்டி, நாமக்கல் முன்னிலையில் கையொப்பம் பெற்று, ஆவணம் செய்திருப்பதும், இதற்கு நாமக்கல் வழங்கறிஞர் லோகேஷ் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications