அமைச்சர் தங்கமணி மீது அதிருப்தி...? திமுகவில் இணைந்த அதிமுகவினர்... பரபரக்கும் நாமக்கல் அரசியல்
நாமக்கல்: அமைச்சர் தங்கமணி மீது அதிருப்தியில் உள்ள அதிமுகவினரை திமுகவில் இணைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.
அதிமுகவிலும் அமைச்சரவையிலும் மிக முக்கிய இடத்தில் இருக்கும் தங்கமணியின் சொந்தமாவட்டமான நாமக்கல்லில் நடைபெற்ற இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வி.பி.துரைசாமி திமுகவை விட்டு வெளியேறிய போது, கிராம வாரியாக அருந்ததியின சமுதாய இளைஞர்களை சந்தித்து அவர்களை ராஜேஷ்குமார் திமுகவில் இணைத்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் தங்கமணி
அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக முக்கியமானவர் அமைச்சர் தங்கமணி. தமிழகம் கடந்து டெல்லி வரை செல்வாக்கு மிக்க அமைச்சர். கடந்த 10 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தின் அதிகார மையமாக திகழ்ந்து வரும் இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம்பெற்றார். தற்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார்.

திமுக வளைப்பு
அமைச்சர் தங்கமணியை சுற்றி பெரிய வட்டமே இருப்பதால் அதனை மீறி அவரை நெருங்க முடியாத அதிமுகவினர் பலர் மனப்புழுக்கத்தில் இருந்து வந்துள்ளனர். இது தங்கமணியின் கவனத்திற்கு சென்றதா எனத் தெரியவில்லை. ஆனால் இதனை அறிந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ், அதிருப்தி அதிமுகவினரை அழைத்துச்சென்று திமுகவில் இணைத்துவிட்டார்.

எந்த உதவியானாலும்
மேலும், எந்த உதவியானாலும் தன்னை எப்போதும் தொடர்புகொள்ளலாம் என்றும் தகுதிக்குரிய அங்கீகாரம் தரப்படும் எனவும் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு உறுதியளித்துள்ளார் ராஜேஷ்குமார். மேலும், அவர்கள் மூலம் இன்னும் பலரை அதிமுகவில் இருந்து திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

தலைமை அலுவலகம்
அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள் தங்கள் அடிப்படை உறுப்பினர் அட்டையை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். கட்சியில் மிக முக்கிய தலைவராகவும், பிற மாவட்ட உட்கட்சி பிரச்சனைகளை பஞ்சாயத்து செய்யக்கூடிய மத்தியஸ்தராகவும் இருக்கும் தங்கமணிக்கு இந்நிகழ்வு தர்ம சங்கடத்தை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications