அதிமுகவின் கோட்டையில்... உயரப்பறக்கும் திமுக கொடி... பவர்ஃபுல் தங்கமணிக்கு வந்த சோதனை..!
நாமக்கல்: அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் 15,809 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கருணாநிதி காலம் தொட்டு எத்தனையோ தேர்தல்களில் முயன்றும் இந்த ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் இதற்கு முன் வெற்றிபெற்றதில்லை.
இப்படிப்பட்ட சூழலில் இந்த ஒன்றியத்தை பல ஆண்டுகளுக்கு பிறகு திமுக இப்போது கைப்பற்றி, நாமக்கல் மாவட்ட அதிமுகவின் பவர்ஃபுல் மனிதரான தங்கமணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்தக் கோட்டையை உடைத்தெறிந்து அங்கு திமுக கொடியை பறக்கவிட்டுள்ளார் திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி. அதிமுகவின் மேல் மட்ட தலைவர்கள் வரிசையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான இமேஜை இந்த தேர்தல் முடிவு சரிய வைத்திருக்கிறது.

மொத்த வாக்குகள்
வெண்ணந்தூர் ஒன்றியம் 6-வது வார்டுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, என 12 பேர் போட்டியிட்டனர். 51 ஆயிரத்து 471 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில், 43 ஆயிரத்து 464 பேர் வாக்களித்துள்ளனர். அதில் திமுக வேட்பாளர் துரைசாமி 15 ஆயிரத்து 809 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்திலேயே மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திற்கான தேர்தல் முடிவில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையையும் அடைகிறார் திமுக வேட்பாளர்.

எவ்வளவு வாக்குகள்?
திமுக வேட்பாளர் 28,792 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் 12,893 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இதேபோல் பாமக வேட்பாளர் 413 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 213 வாக்குகள் பெற்றிருக்கின்றனர். நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் அதாவது அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் 439 ஓட்டுக்கள் பெற்றிருக்கின்றன. அமமுகவை பொறுத்தவரை வெறும் 67 ஓட்டுக்களே பெற்றிருக்கின்றன.

சின்ன பையன்
திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி.யை சின்ன பையன் எனக் கருதி முன்னாள் அமைச்சர் தங்கமணி தரப்பு காட்டிய மெத்தனம் தான் அதிமுகவின் கோட்டையை பறிகொடுக்க காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு மாவட்ட கவுன்சிலரை கூட வெற்றிபெற வைக்க முடியாமல் மாவட்டத்தில் என்ன அரசியல் செய்கிறார் என்றும் டெல்லி வரை தொடர்புகள் இருந்தும் என்ன பயன் எனவும் தங்கமணியை நோக்கி மற்ற நிர்வாகிகள் முணுமுணுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications