தமிழ்நாடு முழுவதும் “கைவரிசை”.. போலீசாரிடம் தொக்காக சிக்கிக்கொண்ட கொள்ளை கும்பல்! பின்னணி என்ன?
நாமக்கல்: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கும்பல் ராசிபுரத்தில் பிடிபட்டது. போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற 2 கொள்ளையர்களுக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது அதிவேகத்தில் வந்த பைக் கீழே விழுந்த நிலையில், அவர்களைப் பிடித்து விசாரிக்கையில், பல திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட சென்னையைச் சேர்ந்த டேவிட் (24), மணி, திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) மூவரும் பிடிபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (45). இவர் கூட்டுறவு சங்க ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, தனது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 18 சவரன் தங்க நகையை திருடிச் சென்று விட்டதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரைப் பெற்ற ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் செல்வதை அறிந்த காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் காவல் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பைக்கில் வந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும், அதிவேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தற்போது ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த டேவிட் (எ) சுந்தர்ராஜ் (24), மணி (22). வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள்தான் ராசிபுரம் பகுதியில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. தங்களை போலீசார் பிடித்து விடுவார்களோ என்று பயந்தே அதிவேகமாக பைக்கை ஓட்டி தப்ப முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சேலம், ராசிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் இவர்கள் நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவங்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இந்த கும்பல் ராசிபுரத்தில் பிடிபட்டுள்ள நிலையில், இவர்களோடு மேலும் சிலரும் இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டார்களா என தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications