காதலியுடன் செல்போனில் பேசிய இளைஞர்.. திடீரென கிணற்றில் விழுந்ததால் அதிர்ச்சி!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இரவு நேரத்தில் காதலியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து பத்து மணி நேரத்திற்கு மேலாக தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார்.
Recommended Video
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் புதன்சந்தப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.
டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது?
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஆஷிக் என்பவர் அந்த பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ஒருவரை காதலித்து வருகிறார். தினந்தோறும் அந்த பெண்ணுடன் ஆஷிக் செல்போனில் பேசுவது வழக்கம்.
தனியார் நூற்பாலை
இந்த நிலையில் தனியார் நூற்பாலையில் அருகே உள்ள கிணற்றுப் பகுதியில் நின்று கொண்டு நேற்று இரவு தனது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர் ஆஷிக் கால் தவறி கிணற்றில் கீழே விழுந்தார். இதன் பின்னர் தன்னை காப்பாற்றுமாறு ஆஷிக் கூச்சலிட்டார்.
சப்தம் கேட்கவில்லை
ஆனாலும் இரவு நேரம் என்பதால் சப்தம் போட்டும் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் அந்த இளைஞர் கிணற்றிலேயே 10 மணி நேரத்திற்கு மேலாக கிடந்துள்ளார். மேலும் காலையில் அப்பகுதி வழியே மக்கள் நடமாட்டத்தை அறிந்த ஆஷிக் மீண்டும் கூக்குரலிட்டுள்ளார். அப்போது யாரோ உதவிக்கு அழைக்கும் கேட்கிறதே என அவ்வழியே போனவர்கள் கிணற்றில் எட்டி பார்த்தனர்.
இளைஞர் ஆஷிக்
அப்போது தான் இளைஞர் ஆஷிக் தத்தெளிப்பது தெரியவந்தது. இதையடுத்து மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் அந்த இளைஞரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கை முறிவு ஏற்பட்டது
இதில் இளைஞரின் கை முறிவு ஏற்பட்டது. கிணற்றில் தவறி விழுந்து பத்து மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடிய இளைஞரின் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காதலுக்கு கண்ணில்லை என்ற வசனம் இந்த இளைஞருக்கு பொருந்தும் போலயே.. அதான் கண்ணு மண்ணு தெரியாமல் விழுந்துவிட்டார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் செல்போனில் பேசும் போது கவனமாக இருத்தல் வேண்டும். ஒரு வேளை கிணற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்திருந்தால் அந்த இளைஞருக்கு நிச்சயம் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள்.