அமெரிக்க அவலம்.. காதலிக்காக நண்பனை அடித்து கொன்ற 16 வயது மாணவன்.. வேடிக்கை பார்த்த 50 பேர்!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் காதலி பொறாமையை தூண்டிவிட்டதால், தன்னுடன் படிக்கும் 16 வயது பள்ளி சிறுவனை நண்பர்களோடு சேர்ந்து சக பள்ளி சிறுவன் நடுரோட்டில் சரமாரியாக தாக்கி நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்தான்.
அதனை 50 பள்ளி சிறுவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நியூயார்க்கின் ஓசன்சைட் இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கசீன் மோரிஸ் என்ற மாணவன் நியூயார்க்கின் ஓசன்சைடில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் சேர்ந்துள்ளான். அதற்கு முன்பு வேறு ஊரில் படித்து வந்தான். இந்நிலையில் பள்ளியில் சேர்ந்த நாள் முதலே அனைவரிடமும் புன்னகையோடு பேசி பழகி வந்த கசீன் மோரீஸ்க்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளனர்.

பொறாமையை தூண்டிய காதலி
இந்நிலையில் மாணவன் கசீன் மோரிஸ் கடந்த ஞாயிறு அன்று இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, தனியே நடந்து சென்ற சக வகுப்பு மாணவிக்கு உதவுவதற்காக அவளது வீடு வரை உடன் நடந்து சென்றான். இந்நிலையில் கசீன் மோரிஸ் தான் தன்னை வீடு வரை பத்திரமாக அழைத்து வந்தததை பொறாமையைத் தூண்டும் வகையில், தனது காதலனிடம் அந்த மாணவி சொல்லி இருக்கிறார்.

மாணவனை கத்தியால் குத்தினான்
இதனால் வெறுப்படைந்த அவரது காதலன், நண்பர்களோடு சேர்ந்து கடந்த திங்களன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய கசீன் மோரிஸை பிரபலமான பீட்ஸா உணவகம் முன் வைத்து தாக்கினான். கொடூரமாக தாக்கி அந்த மாணவன், கசீனை கத்தியைக் கொண்டு நெஞ்சில் குத்தினான். ரத்தம் வழிந்து மாணவன் உயிருக்கு போராடி உள்ளான்.

சண்டையை தடுக்கவில்லை
இதனை அதே பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதே சண்டை பந்தயம் நடப்பது போல் எண்ணி உற்சாகமாக குரல் எழுப்பி வேடிக்கை பார்த்தபடி வீடியோ எடுத்துள்ளனர். ஒரு மாணவர் கூட அந்த சண்டையை தடுக்கவில்லை.

குடும்பத்தினர் வேதனை
இந்நிலையில் இந்த கொலை வெறித் தாக்குதலில் 16 வயது பள்ளி சிறுவனான கசீன் திங்கள்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிக்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனான். மிக அமைதியான சுபாவம் கொண்ட தங்களது பிள்ளையை சக மாணவர்கள் யாருமே காப்பாற்ற முன்வராதது அவரது குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது. இது தொடர்பாக மிகுந்த வேதனையை அந்த குடும்பத்தினர் ஊடகங்களிடம் வெளிப்படுத்தினர்.

இப்படியா நடந்து கொள்வது
இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையை தடுக்க சக மாணவர்கள் யாரும் முன்வராமல் வீடியோ எடுத்தது குறித்து நாசாவ் கவுண்டி காவல் துறை புலனாய்வு அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பாட்ரிக் செய்தியாளர் கூட்டத்தில் வேதனை தெரிவித்தார். "மாணவர்களே உங்கள் நண்பன் இறந்து கொண்டிருக்கிறான். அதை நீங்கள் வீடியோ எடுக்குறீங்கள். அது மிக மோசமானது." என்றார். இந்நிலையில் இந்த படுகொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, அதேநேரம் வீடியோவைவைத்து கசீன் மோரிஸை தாக்கியவர்கள் யார் யார் என்பதை அடையாளம் கண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications