சட்டென்று மாறிய வானிலை.. நடுவானில் தீ பிடித்த விமானம்.. அமெரிக்காவில் சோகத்தில் முடிந்த விமான பயணம்
இந்த விமானத்தில் 500 கி.மீ வேகத்தில் சுமார் 3000 கி.மீக்கும் அதிகமாக பயணிக்க முடியும்.
நியூயார்க்: அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானி உட்பட பயணிகள் அனைவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஓஹியோ உலோகத் தொழிற்சாலையில் சில நாட்களுக்கு முன்னர் வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கரும்புகையானது சுற்று வட்டாரத்தில் சுமார் 24 கி.மீ தூரம் வரை பரவியதாக கூறப்படுகிறது. இந்த மோசமான விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இதற்கு ஆலோசனை வழங்க சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் இப்பகுதிக்கு வந்துக்கொண்டிருந்தனர்.
ஊழியர்கள் 4 பேரும் விமானி ஒருவரும் இரட்டை எஞ்சின் கொண்ட பீச் BE20 ரக விமானத்தில் ஓஹியோவுக்கு வந்துக்கொண்டிருந்தனர். இந்த வகை விமானத்தில் சுமார் 7 முதல் 15 பேர் வரை பயணிக்கலாம். அதிகபட்சமாக 500 கி.மீ வேகத்தில் 3,756 கி.மீ வரை இந்த விமானத்தால் பறக்க முடியும். கடந்த 1972ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த விமானம் ஒரு சக்ஸஸ்புல் மாடல்தான்.

வானிலை
ஆனால் வானிலை சாதகமாக இல்லையெனில் எவ்வளவு நவீன விமானமாக இருந்தாலும் அது விபத்துக்குள்ளாவதை தடுக்க முடியாது. அப்படிதான் இந்த விபத்தும் நடந்திருக்கிறது. விமானம் ஓஹியோவை நெருங்கும்போது பலத்த காற்றுடன் மழை பெய்திருக்கிறது. எனவே நிலைத்தடுமாறிய விமானம், ஓடுதளத்திற்கு சில கி.மீ முன்னர் இருந்த பாறை நிறைந்த பகுதியில் விழுந்து தீ பற்றி எரிந்துள்ளது.

உயிரிழப்பு
இந்த விபத்தில் 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். தொழிற்சாலை விபத்து குறித்து ஆலோசனை வழங்க வந்த ஊழியர்கள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "இந்த விமானம் வரும்போது வானிலை அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால் இந்த விபத்திற்கு மோசமான வானிலைதான் காரணமா? என்றும் உறுதியாக கூறமுடியாது.

காற்றின் வேகம்
விமானம் விபத்துக்கு உள்ளானபோது அந்த பகுதியில் காற்றின் வேகம் 74 கி.மீ என்கிற அளவில் இருந்தது. மட்டுமல்லாது இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்துக்கொண்டிருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். எப்படி இருப்பினும் விசாரணை முடிவில்தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும். தற்போதும் வானிலை மோசமாக இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

காரணம்
சமீப காலமாக விமான விபத்துகள் அதிக அளவில் நடந்து வருவதாகவும், இதில் விமானியின் தவறுகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தொழில்நுட்ப கோளாறுகளும் பிரதான பங்கு வகிப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர். தற்போது ஓஹியோவில் நடந்துள்ள விபத்து குறித்து மத்திய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications