சீனா என்னவேண்டுமானாலும் செய்யும்.. என்னை தோல்வி அடைய வைக்க பிளான்.. டிரம்ப் பரபரப்பு புகார்!
நான் அதிபர் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று சீனா கடுமையான வேலைகளை செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார்.
நியூயார்க்: நான் அதிபர் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று சீனா கடுமையான வேலைகளை செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அமெரிக்காவில் கொரோனா பரவ சீனாதான் காரணம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 1,065,956 பேர் அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவனமாக இருங்கள்.. டிசம்பரிலேயே எச்சரித்த சிஐஏ.. 12 முறை சென்ற உளவு ரிப்போர்ட்.. டிரம்ப் செய்த தவறு!
டிரம்ப் பேட்டி
இந்த நிலையில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம். என்னால் நிறைய விஷயங்களை செய்ய முடியும். கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவிற்கு எதிராக என்னால் நிறைய விஷயங்களை செய்ய முடியும். சீனா எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
தேர்தல் திட்டம்
நான் அதிபர் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று சீனா இப்படி செய்கிறது. கொரோனா குறித்த உண்மைகளை சீனா மறைத்ததே இதற்கு பெரிய உதாரணம் ஆகும். என்னை தோல்வி அடைய செய்வதற்கு சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம். நான் என்ன நடக்கிறது என்பதை தீவிரமாக கவனித்துக் கொண்டு இருக்கிறேன்.
சீனா திட்டம்
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு சீனா நெருக்கமாக உள்ளது. ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சீனா என்னவேண்டுமானாலும் செய்யும். நான் சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதால் என்னை தோல்வி அடைய வைத்துவிட்டு, ஜோ பிடனை வெற்றிபெற வைக்க சீனா முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் இதை சரியாக பயன்படுத்திக் கொள்கிறது.
எதிர்க்கட்சி திட்டம்
கருத்து கணிப்புகள் பிடனுக்கு ஆதரவாக வர இதுதான் காரணம்.இந்த கருத்து கணிப்புகளை நான் நம்ப போவதில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அமெரிக்க மக்கள் அறிவாளிகள். தகுதி இல்லாத ஒரு நபரை அவர்கள் தங்கள் அதிபராக தேர்வு செய்ய மாட்டார்கள். அமெரிக்காவின் பொருளாதாரம் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக பலர் வேலை இழக்க தொடங்கி உள்ளனர்.
விரைவில் மருந்து
நமது ஜிடிபி சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல மாகாண கவர்னர்கள் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள். சிலர் கொஞ்சம் முன்னேற்றம் அடைய வேண்டும். நான் அவர்களின் பெயர்களை சொல்ல போவதில்லை. விரைவில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். இதற்கான ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டுகோள் வைத்து இருக்கிறேன், என்று அதிபர் டிரம்ப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.