கொரோனா.. அமெரிக்க வரலாற்றில் முதல்முறை.. 50 மாகாணங்களிலும் பேரிடர் அறிவிப்பு.. டிரம்ப் அதிரடி முடிவு
அமெரிக்காவில் முதல் முறையாக அங்கு இருக்கும் 50 மாகாணங்களிலும் ஒரே சமயத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அதிபரின் பேரிடர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் முதல் முறையாக அங்கு இருக்கும் 50 மாகாணங்களிலும் ஒரே சமயத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அதிபரின் பேரிடர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 50 மாகாணங்களும் பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 551,081 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 21668 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்கா கொரோனா காரணமாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பில் இருந்து அமெரிக்கா மீண்டும் வர இன்னும் பல வருடங்கள். முக்கியமாக பொருளாதார ரீதியான அமெரிக்கா இதில் இருந்து மீள பல வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள்.

வேகம் அதிகரிக்கிறது
அங்கு கொரோனாவின் வேகம் 5 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. அதாவது அங்கு கொரோனா காரணமாக ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பலி எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிறது. அங்கு ஐந்து நாட்களுக்கு முன் 10 ஆயிரம் என்று இருந்த பலி எண்ணிக்கை தற்போது 20 ஆயிரம் என்று ஆகியுள்ளது. அதேபோல் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 நாட்களுக்கு ஒரு முறை இரட்டிப்பு ஆகிறது.

பேரிடர் அறிவிப்பு
இதனால் அங்கு வரிசையாக மாகாணங்களில் பேரிடர் என்று அறிவிக்கப்பட்டு வந்தது. அங்கு பொதுவாக மாகாண ஆளுநர்கள் எங்கள் மாகாணங்களை பேரிடர்களாக அறிவியுங்கள் என்று கூறுவார். இதை கருத்தில் கொண்டு அதிபர் பேரிடராக அறிவிப்பார். ஒரு மாகாணம் பேரிடராக அறிவிக்கப்பட்டால், அந்த மாகாணத்திற்கு மத்திய அரசு நிதி உட்பட பல்வேறு உதவிகளை செய்யும்.

எப்படி நடக்கும்
இந்தியாவில் எப்படி பேரிடர் அறிவிக்கப்படுகிறதோ அப்படித்தான். இந்த நிலையில் அமெரிக்காவில் முதலில் நியூயார்க் மாகாணத்தில் பேரிடர் அறிவிக்கப்பட்டது. அதன்பின் வரிசையாக கலிபோர்னியா, வாஷிங்கடன் என்று
பல மாகாணங்களில் பேரிடர் அறிவிக்கப்பட்டது. கடைசியாக வியோமிங் மாகாணத்தில் பேரிடர் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் அனைத்து 50 மாகாணங்களிலும் பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான விஷயம்
அமெரிக்காவில் முதல்முறை இப்போதுதான் அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான இயற்கை பேரிடரில் அல்லது தீவிரவாத தாக்குதலிலும் அங்கு ஒரே நேரத்தில் அனைத்து மாகாணத்திலும் பேரிடர் அறிவிக்கப்படவில்லை. இதனால் தற்போது எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கை அங்கு மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
|
டிரம்ப் செய்த டிவிட்
இது தொடர்பாக தற்போது அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார். அதில், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக நாம் நாடு முழுக்க அதிபரின் பேரிடர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். நாம் இந்த கொரோனாவிற்கு எதிரான சண்டையில் வென்று வருகிறோம். நான் அந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிரான போரில் கண்டிப்பாக வெல்வோம், என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications