சுனிதா வில்லியம்ஸை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்.. சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது!
நியூயார்க்: ஒரே வாரத்தில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டு, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், மாதக்கணக்கில் அங்கு சிக்கியுள்ளார். இந்நிலையில் அவரை மீட்பதற்காக அனுப்பப்பட்ட, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் பத்திரமாக விண்வெளி மையத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறது.
விண்வெளி ஆய்வுகள் இன்றை காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, பூமி எதிர்கொள்ள இருக்கும் ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே அறிந்துக்கொள்ள இந்த ஆய்வுகள் அவசியமானதாக இருக்கின்றன. இதற்காக பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கி ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியொரு ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஜூன் 5ம் தேதி இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் பயணித்திருந்தார். அவருடன் புட்ச் வில்மோர் என்கிற மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரரும் பயணித்திருந்தார். இந்த பயணம் வெறும் ஒரு வாரத்திற்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது.
இவர்களை போயிங் நிறுவனத்தை சேர்ந்த 'ஸ்டார்லைனர்' எனும் விண்கலம் அழைத்து சென்றிருந்தது. ஆனால் அவர்கள் பயணித்த, ஸ்டார்லைனர் விண்கலம் காலை வாரிவிட்டது. அதாவது ஸ்டார்லைனர் விண்கலத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுவிட்டன. இது பூமிக்கு திரும்பும்போது பாதுகாப்பாக தரையிறங்க த்ரஸ்டர் எனப்படும் அமைப்பு செயல்பட வேண்டும். இந்த அமைப்பில்தான் கோளாறு ஏற்பட்டிருக்கிறது.
இதனை சரி செய்யும் பணியில் சுனிதாவும் இதர விண்வெளி வீரர்களும் முயன்றனர். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை. எனவே ஸ்டார்லைனர் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பியது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மாத கணக்கில் விண்வெளியில் சிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வசம் நாசா ஒப்படைத்தது. அதன்படி நேற்று க்ரூ டிராகன் 9 விண்கலம் ஏவப்பட்டது. அது நேற்று இரவு வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருக்கின்றனர். இவர்கள், சுனிதா வில்லியம்ஸ் உடன் இணைந்து விண்வெளியில் ஆய்வை மேற்கொள்வார்கள்.
இந்த விண்கலத்தில் மொத்தம் 4 பேர் வரை பயணிக்க முடியும். ஆனால் 2 பேரை மட்டுமே நாசா அனுப்பியுள்ளது. மீதமுள்ள இரண்டு சீட்டுகள் சுனிதாவுக்கும், வில்மோருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்கலம் மூலம் வரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications