மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே.. இந்தியர்களை நாடு கடத்திய டிரம்ப்.. இன்று இந்தியா வரும் 119 பேர்!
நியூயார்க்: இரண்டாவது கட்டமாக அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். நேற்று இவர்கள் விமானம் மூலம் அதிகாலை நாடு கடத்தப்பட்டனர். சங்கிலியில் கட்டப்பட்டு, போர் விமானத்தில் இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்தில் இரவு 10 மணிக்கு இவர்கள் தரையிறங்குவார்கள். சட்டவிரோதமாக குடியேறிய 119 பேரில், 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சரியாக மோடி அமெரிக்காவில் இருந்த அதே நேரத்தில் டிரம்ப் இந்தியர்களை நாடு கடத்தி உள்ளார் என்பதுதான் இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,407 இந்தியர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது.
குறைந்தபட்சம் 20,407 ஆவணமற்ற இந்தியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம். இவர்களில், 17,940 பேர் முறையான ஆவணங்களற்ற நபர்கள் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது. 2,467 பேர் தற்போது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் (ICE) பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்கள் கடைசியாக 2022 இல் புதுப்பிக்கப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இது மீண்டும் புதுப்பிக்கப்படலாம் என்பதால்.. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உயரலாம்.
இந்தியாவில் இருந்து சுமார் 725,000 சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர், இது மெக்ஸிகோ மற்றும் எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை ஆகும்.
நாடு கடத்தப்படும் இந்தியர்கள்
அமெரிக்காவில் இருந்து முறையின்றி குடியேறி உள்ள மக்களை வெளியேற்றும் வேகத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள வேகத்தை விட.. இன்னும் அதிக வேகத்தில் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர் அதிகாரிகளிடம் குறிப்பிட்டு உள்ளாராம்.
அதிகாரிகள் இதில் செயல்படும் வேகத்தை டிரம்ப் விரும்பவில்லை. அதிகாரிகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறாராம். அமெரிக்காவில் 700,000 ஆவணமற்ற இந்திய குடிமக்கள் வசிக்கின்றனர், மத்திய அமெரிக்க நாடுகளான எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருந்தும் கூட அமெரிக்காவில் பலர் குடியேறி உள்ளனர்.
இதுவரை சுமார் 18,000 இந்தியர்கள் அகற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. மேலும் 3,000 இந்தியர்கள் ஏற்கனவே முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20,000 இந்தியர்கள் உடனடியாக நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். நீதிமன்ற விசாரணைகள் இல்லாமலேயே அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியர்கள் வெளியேற்றம்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளார் . இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.அதன் ஒரு கட்டமாக அமெரிக்க ராணுவ விமானம், அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்ற தொடங்கி உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து 140+ இந்தியர்களை ஏற்றிக்கொண்டு C-17 விமானத்தில் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த நாடுகடத்தலானது இறுதி கிடையாது.. திட்டமிடப்பட்ட பல நாடு கடத்தல் பிளான்களில் இதுவும் ஒன்று. வரும் நாட்களில் இன்னும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
யாரெல்லாம் அனுப்பப்படுகிறார்கள்;
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications