பேரழிவுக்கு இன்னும் 89 விநாடிகள்தான் இருக்கு.. பகீர் கிளப்பும் 'Doomsday' கடிகாரம்
நியூயார்க்: உலகமயம், காலநிலை மாற்றங்கள், போர், அணு ஆயுதம் உள்ளிட்டவற்றால் மனித குலம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பூமி பேரழிவை சந்திக்க இன்னும் 89 விநாடிகள்தான் இருக்கிறது என 'டூம்ஸ்டே' கடிகாரம் எச்சரித்திருக்கிறது.
'டூம்ஸ்டே' கடிகாரம் என்றால் என்ன? அது எப்படி உலக அழிவுக்கான காலத்தை வகுக்கிறது? வெறும் 89 நிமிடங்களில் உலகம் அழிந்துவிடுமா? என பல்வேறு கேள்விகளுக்கு இந்த செய்தி விளக்கமளிக்கிறது.

'டூம்ஸ்டே' கடிகாரம் என்றால் என்ன?:
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அணு விஞ்ஞானிகளால் இந்த கடிகாரம் இயக்கப்பட்டு வருகிறது. போர், அணு ஆயுதங்கள் என நாம் உருவாக்கிய அச்சுறுத்தல்களை வைத்துக்கொண்டு, இந்த உலகத்தை அழிக்க நாம் எவ்வளவு நெருக்கமாக சென்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த கடிகாரம் விளக்குகிறது.
இது கடந்த 1947ம் ஆண்டு, 'மன்ஹாட்டன் திட்டத்தில்' பணியாற்றிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் உருவாக்கபட்ட அணு குண்டுகள்தான் ஜப்பானில் வீசப்பட்டு லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் இந்த கடிகாரம் அணு ஆயுத அச்சுறுத்தலுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், தற்போது காலநிலை மாற்றம், உயிர்பாதுகாப்பு (biosecurity), மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள் (disruptive technologies) உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
எப்படி இயங்குகிறது?:
உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் உலகத்திற்கு மனிதர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அடிப்படையாக கொண்டு இந்த கடிகாரத்தின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு இந்த கடிகாரம், நள்ளிரவுக்கு நெருக்கமாக அதாவது உலகம் அழிவதற்கு 90 விநாடிகள் இருப்பதாக மாற்றி வைக்கப்பட்டது. அப்போதுதான் உக்ரைன்-ரஷ்யா போர் மிகுந்த உச்சத்தில் இருந்தது. மட்டுமல்லாது AI தாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவையும் இந்த கடிகாரத்தின் நேரத்தை மாற்றி அமைக்க காரணமாக இருந்தது.
இன்றைய தேதியில், நள்ளிரவுக்கு 89 விநாடிகள்தான் இருக்கிறது என்று மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை விட நாம் இன்னும் உலக அழிவை நோக்கி வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை இது உணர்த்தியுள்ளது.
'டூம்ஸ்டே' கடிகாரத்தின் நோக்கம் என்ன?:
இந்த கடிகாரம் முழுக்க முழுக்க விழிப்புணர்வு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. உலக அழிவு குறித்து அரசும், பொதுமக்களும் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இந்த கடிகாரம் வலியுறுத்துகிறது. ஆனால் போர்களை நடத்துவதும், புதிய ஆபத்தான ஆயுதங்களை கண்டுபிடிப்பதும் இதே அரசாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்த கடிகாரத்தின் நேரம் குறைந்துக்கொண்டே வந்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இப்போது மணி சரியாக 11.01 என 'டூம்ஸ்டே' கடிராம் காட்டுகிறது. சரியாக நள்ளிரவு 12 மணி ஆகும்போது உலகம் அழிந்துவிடும்.












Click it and Unblock the Notifications