உலகிலேயே முதன்முறையாக.. அமெரிக்காவில் நோயாளிக்காக ட்ரோன் மூலம் பறந்த சிறுநீரகம்!
நியூயார்க்: உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகத்தை கொண்டு சென்று, நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஆளில்லா விமானங்களின் வளர்ச்சியும், பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில், சிறுநீரகத்தை கொண்டு செல்ல ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பால்டிமோர் பகுதியைச் சேர்ந்த 44 பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் 5 கிமீ தொலைவில் இருந்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக் கழகத்தில் இருந்து பால்டிமோருக்கு சிறுநீரகத்தை எடுத்து வருவதற்கு நேரம் அதிகமாகும். எனவே ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அனைவத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது. மருத்துவ உலகிலும், பொறியியல் துறையிலும் இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதற்கெனவே, அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகவே, அதிவிரைவாக நோயாளிகளிடம், உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் (ஆள் இல்லாத விமானம்) சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், இந்த ட்ரோன் சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications