வெண் கீற்று.. நடுவே மஞ்சள் நிற சிறு புள்ளி.. ஆஹா.. இப்டி ஒரு சூர்யோதயத்தை நீங்க பார்த்திருக்கீங்களா
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட சூரியஉதயத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட சூரியஉதயத்தின் புகைப்படங்களை நாசா விஞ்ஞானி வெளியிட்டுள்ளார்.
இந்த பூமி சுழல்வதே சூரியனை மையாக வைத்து தான். எனவே இயற்கையின் ஆதியாகவும், அந்தமாகவும் கருதப்படும் சூரியனை கடவுளாக வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த நடைமுறை எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது.
சூரிய வழிபாடு என்பது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த அற்புதமான பாடங்களில் ஒன்று. அதிகாலை வேளையில் சூரியன் வானில் உதயமாகும் போது, அதன் அழகை பார்ப்பதற்கு கண்கள் கோடி வேண்டும். எனவே தான் கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரிக்கு சூரியஉதயத்தை காண பல மைல் தூரத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.

அரிதான காட்சி
தரையில் இருந்தபடி சூரிய உதயத்தை பார்ப்பது எளிதானது தான். ஆனால் விண்ணில் இருந்து பார்ப்பது அத்தனை சுலபமா என்ன? அப்படி ஒரு அரிதான காட்சியை நாம் காண வகை செய்திருக்கிறது நாசா.

சூரிய உதயம்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் விஞ்ஞானியாக இருப்பவர் பாப் பென்கென். இவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட சூரியஉதயத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் நிறப் புள்ளி
அந்த புகைப்படத் தொகுப்பின் முதல் படத்தில், இருள் சூழ்ந்திருக்கும் வானில் ஒரு மெல்லிய வெண் கீற்றலாக வெளிச்சம் தென்படுகிறது. 2வது படத்தில் அந்த கோட்டின் நடுவே மஞ்சள் நிறந்தில் ஒரு சிறு புள்ளி தெரியத் தொடங்குகிறது. 3 மற்றும் 4வது புகைப்படங்களில் மெல்ல மெல்ல அந்த மஞ்சள் புள்ளி, பிரகாசமான தீபமாக சுடர்விட்டு எரிவது போல் ஜொலிக்கிறது.

காணாமல் போன நட்சத்திரங்கள்
சூரியஉதயத்தின் இந்த முதல் தருணங்களின் புகைப்படங்களை பார்க்கும் போது நமக்கு ஆச்சர்யப் பெருமூச்சு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு இல்லை. இதில் ஆச்சரியப்படும் மற்றொரு விஷயம் என்னவென்றால், சூரியஉதயத்தின் போது ஒரு நட்சத்திரம் கூட தென்படவில்லை என்பதே. இந்த புகைப்படங்களை பாத்து நெட்டிசன்கள் மெய்மறந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications