களமிறங்கிய ஜெய்சங்கர்.. டிரம்ப்பின் லெப்ட் ஹேண்டை நேரில் சந்தித்து அழுத்தம்.. வேகம் காட்டும் இந்தியா
நியூயார்க்: இந்தியா அமெரிக்காவிற்கு இடையிலான மோதலுக்கு இடையில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புதிய எச்-1பி விசாக்களுக்கு 100,000 அமெரிக்க டாலர் கட்டணத்தை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது. ட்ரம்பின் இந்த அறிவிப்பு இந்தியாவின் தொழில்நுட்பத் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதட்டங்களையும் அதிகரிக்கச் செய்தது.

ஜெய்சங்கர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மீட்டிங் அறையில் நடைபெற்ற இச்சந்திப்பு, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு வரி விதித்த பிறகு நடந்த முதல் நேரடி உரையாடலாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ரீதியான சிக்கல்கள் இருந்தாலும், மோதல்கள் இருந்தாலும், இரு நாடுகளின் தலைவர்களும் தங்கள் உறவில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக அன்புடன் வரவேற்றுக்கொண்டனர்.
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியா அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான உறவு. இந்தியா எங்களுக்கு முக்கியமான நட்பு நாடு. வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பான துறைகளில் நாங்கள் நெருங்கிய உறவை கொண்டுள்ளோம். சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் உறவை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த உறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில், குவாட் அமைப்புடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம் என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஜெய்சங்கர் சொன்னது என்ன?
ஜெய்சங்கரும் இந்த சந்திப்புக்குப் பிறகு X தளத்தில், தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இருதரப்பு சந்திப்பில் பேசினோம். பலர் சர்வதேச பிரச்சினைகள் குறித்து எங்கள் உரையாடல் அமைந்தது. முக்கியமாக வரி விதிப்பு , விசா கொள்கைகள் குறித்தும் நாங்கள் ஆலோசனைகள் நடத்தினோம்., என்று கூறி உள்ளார்.
ட்ரம்பின் திடீர் விசா அறிவிப்பு
ட்ரம்பின் திடீர் எச்-1பி விசா அறிவிப்பு இந்த சந்திப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எச்-1பி விசாக்களில் இந்தியா மிகப்பெரிய பயனாளியாக உள்ளது. கடந்த ஆண்டு, மொத்த விசா ஒப்புதல்களில் 71% இந்தியர்களுக்குக் கிடைத்தது, அதேசமயம் சீனாவிற்கு 12%க்கும் குறைவாகவே கிடைத்தது.
புதிய கட்டணம், எச்-1பி திட்டத்தை அதிகம் நம்பியிருக்கும் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் செலவுகளைக் கடுமையாக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியர்கள் அமெரிக்காவிற்கே செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த மோதல், ஏற்கனவே நிலவி வரும் வர்த்தகப் பிரச்சினைகளுக்கு மேலும் ஒரு அடியாக அமைந்துள்ளது.
இந்தியா மீது வரி விதிப்பு
கடந்த ஜூலை மாதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்தது. அதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குப் பிறகு மேலும் 25% வரி விதித்து, ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதைக் காரணமாகக் கூறியது. இந்த வரி விதிப்புகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கியது.
2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா அமெரிக்காவிற்கு இடையிலான மோதலுக்கு இடையில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications