உங்களால்தான் பிரச்சனையே! புடினுக்கு போனை போட்டு.. நெருக்கிய மோடி? நேட்டோ சொன்ன ஷாக் தகவல்
நியூயார்க்: அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும்படி மோடி புடினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோடி - புடின் இருவரும் போனில் பேசியதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா அமெரிக்கா மோதல்
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் வரை இந்த வரி விதிப்பு தொடரும். இதை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று டிரம்ப் கூறி உள்ளார்.
நேட்டோ அமைப்பு தலையீடு
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக விதித்துள்ள வரிகள், ரஷ்யாவிற்கு எதிராக திரும்ப தொடங்கி உள்ளன. ரஷ்யாவிற்கு இந்தியா பிரஷர் போட தொடங்கிவிட்டது என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறி உள்ளார்.
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும்படி மோடி புடினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
டொனால்ட் டிரம்ப் விதித்த இந்தத் தடைகள் இந்தியாவை பெரிதும் பாதிப்பதாகவும், இதன் காரணமாக பிரதமர் மோடி விளாடிமிர் புடினிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் மார்க் ரூட்டே குறிப்பிட்டு உள்ளார். இந்தியா ரஷ்யாவிற்கு ஆதரவளிப்பதால் டிரம்ப் வரிகளை விதித்துள்ளார். இதனால் இப்போது மோடி புடினை கேள்வி கேட்க தொடங்கி உள்ளார்.
உக்ரைன் போர்
உக்ரைன் போர் நின்றால்தான் அமெரிக்கா வரி விதிப்பை நிறுத்தும். இதனால் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதன் காரணமாகவே மோடி புடினுக்கு போன் செய்துள்ளார்.
நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன், இந்தியா ரஷ்யாவுடன் உடன் நிற்கிறது. ஆனால் உங்கள் திட்டம்தான் என்ன? எங்களுக்கு வரி சுமை அதிகம் உள்ளது. நாங்கள் இப்போது அமெரிக்காவிலிருந்து 50% வரிகளை எதிர்கொள்கிறோம். போர் தொடர்பாக நீங்கள் என்ன முடிவு செய்துள்ளீர்கள்? போர் காரணமாகவே நாங்கள் வரியை எதிர்கொள்கிறோம் என்று புடினிடம் மோடி பேசி உள்ளார். இதனால் புடினுக்கு பிரஷர் ஏற்பட்டு உள்ளது, என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
ஆனால் மோடி - புடின் பேசியதாக நேட்டோ கூறும் இந்த தகவலை, இந்தியா ரஷ்யா இரண்டும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications