ஹாலிவுட் திரைப்பட காட்சியை மிஞ்சும் பால விபத்து.. அதிர்ந்து போன அமெரிக்கா! 6 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில், சரக்கு கப்பல் மோதியதில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், மற்றவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆறு மீது இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 2.6 கி.மீ நீளத்திற்கு இருக்கும் இந்த பாலம் அமெரிக்காவின் மிகவும் பிஸியான பாலங்களில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கு என்கிற விகிதத்தில் ஆண்டுக்கு 1 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன.

இந்நிலையில் நேற்றிரவு, சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று படப்ஸ்கோ ஆற்றை கடந்து சென்றபோது, இந்த பாலத்தின் மீது மோதியிருக்கிறது. இதில் பாலம் உடனே இடிந்து விழுந்திருக்கிறது. ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் காட்சியை போல, நிஜமாகவே பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின்போது, பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு லாரி, கார்கள் உள்ளிட்டவை ஆற்றில் விழுந்திருக்கின்றன.
இந்நிலையில், இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாலம் இடிந்து விழுந்ததையடுத்து தற்போது பால்டிமோர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. விபத்தில் 8 பேர் காணாமல் போயினர். இதில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில் 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது 6 பேரும் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விபத்து வேண்டுமென்றே நடந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. கப்பல் பாலத்தில் மோதுவதற்கு முன்னர் துறைமுக கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்திருக்கிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய உள்ளூர் மக்களுக்கும், மீட்பு படையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாலத்தை மீண்டும் சரி செய்யும் செலவை அரசு ஏற்கும்" என்று கூறியுள்ளார்.
விபத்து குறித்து பேசிய மோரிலாந்து ஆளுநர் வெஸ் மூர், "கப்பல் பாலத்தில் மோதுவதற்கு முன்னர், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசர அழைப்பை விடுத்தது. எனவே, நாங்கள் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இது மக்களை பெரிய அளவில் காப்பாற்ற உதவியது. இது சதி செயல் இல்லை, விபத்து என்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications