டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு விழுந்த பெரிய அடி.. அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
நியூ யார்க்: அமெரிக்காவில் அரசின் பல்வேறு துறைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. பணி நீக்கம் பணி தொடரும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல, நீதிமன்ற உத்தரவின் மூலம் பாதுகாப்பு, வேளாண்மை என பல்வேறு துறைகளில் நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டிய நிர்பந்தமும் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் அதிபரான பிறகு அமெரிக்காவில் பல அதிரடிகள் நடந்து வருகிறது. அதேபோல, கடந்த முறை போலவே சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் அமெரிக்க அரசியல் களத்தை அதிர வைத்து வருகிறார் டிரம்ப்.

பணி நீக்கம் தொடரும் என்றார் எலான் மஸ்க்
அதிபர் தேர்தலில் தனக்காக பிரசாரம் செய்து ஆதரவு திரட்டிய உலக பெரும் பணக்காரர் ஆன எலான் மஸ்க்கிற்கு தனது நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பு ஒன்றையும் அளித்தார். அதாவது அமெரிக்காவில் அரசு நிர்வாகம் செயல் திறன் துறை (DODGE) என்ற பொறுப்பை அளித்தார். அரசில் தேவையின்றி உள்ள செலவீனங்களை கட்டுப்படுத்துவது அவரது முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது. ஏற்கனவே பல அதிரடி நடவடிக்கைகளுக்கு சற்றும் சளைக்காதவராக அறியப்பட்ட எலான் மஸ்க்கும், எதிர்பார்த்தது போலவே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
குறிப்பாக அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் ப்ராபேஷன் காலத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என எலான் மஸ்க் கூறிய நிலையில், பணி நீக்கத்திற்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் அஸ்லுப், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் என்று பெடரல் அமைப்புகளுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு பின்னடைவு
பெரிய அளவிலான பணி நீக்கத்திற்கு மோசமான செயல் திறன் எனக் கூறி நியாயப்படுத்துவது சட்டப்பூர்வ தேவைகளை தவிர்ப்பதற்கான ஒரு போலி முயற்சி என்றும் நீதிபதி சாடியிருக்கிறார். அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த உத்தரவு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் மூலம் பாதுகாப்பு, வேளாண்மை, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டிய நிர்பந்தம் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications